ரஷ்யாவுக்கான புதிய அமெரிக்க தூதர்: அலறும் ரஷ்ய ஊடகங்கள்!
மாஸ்கோ: அமெரிக்காவின் புதிய தூதராக ஜான் டெஃப்ட்டை ஒபாமா அரசு அறிவித்தது முதல் அவரை மிகக் கடுமையாக ரஷ்யாவின் ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.
உக்ரைன் மற்றும் பால்டிக் நாடுகள் விவகாரங்களில் ரஷியாவின் மேலாதிக்கத்தை அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் முழுமையாக விரும்பவில்லை. பல பத்தாண்டுகளுக்கு முன்பே ஓய்ந்து போயிருந்த அமெரிக்கா- ரஷ்யா இடையேயா பனிப்போர் மீண்டும் உதயமாகிவிட்டது என்பதையே அண்மைக்கால நிகழ்வுகள் விவரிக்கின்றன.
உக்ரைனின் கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைத்து, பால்டிக் நாடுகளின் கடற்பரப்பில் உரிமை கோருவது, ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு போர் விமானங்களை அனுப்புவது. சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா உதவுவதை எதிர்ப்பது என சர்வதேச அரசியலில் அமெரிக்காவுடன் வெகுதீவிரமாக மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறது ரஷ்யா.
இந்த நிலையில் உக்ரைனுக்கான முன்னாள் தூதராக டெஃப்ட்டை தற்போது ரஷ்யாவுக்கான தூதராக அறிவித்துள்ளது அமெரிக்கா. ஆனால் ரஷ்யாவின் ஊடகங்களோ, 'உக்ரைன் கிளர்ச்சிக்கு காரணகர்த்தாவே டெஃப்ட் என்று விமர்சித்து வருகின்றன. அத்துடன் 'நாடுகளின் ஸ்திரதன்மையை சீர்குலைப்பதில் வல்லவர் டெஃப்ட்" என்றெல்லாம் கூட ரஷ்ய ஊடகங்கள் பட்டம் சூட்டி "வரவேற்பு' கொடுக்கிறது.
அதாவது டெஃப்ட்டின் வருகை மூலம் ரஷ்யாவிலும் உள்நாட்டு கிளர்ச்சியை அமெரிக்கா தூண்டிவிடுமோ என்பதுதான் அந்நாட்டு ஊடகங்கள் அச்சம். அதற்கேற்ப ரஷ்யாவும் டெஃப்ட்டின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.
அமெரிக்காவும் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ளக் கூடிய டெஃப்ட்டை ரஷ்யாவை மிரட்டத்தான் நியமித்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனால் ரஷ்யா- அமெரிக்கா இடையேயான உறவு வரும் காலத்தில் மிக மோசமான நிலைக்கு போகலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.