பெரும் குழப்பம்! 11 அரசியல் கட்சிகளை அதிரடியாக சஸ்பெண்ட் செய்த ஜெலன்ஸ்கி.. என்ன காரணம் தெரியுமா
கீவ்: உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் தொடர்பாக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் போர் 25 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இதுவரை எவ்வித உடன்பாடும் ஏற்படாத நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தப் போர் உலக நாடுகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என அனைத்து நாடுகளும் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது.

உக்ரைன் போர்
இருப்பினும், போர் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், முக்கிய நகரங்களான கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே ரஷ்ய உளவாளிகளின் நடமாட்டம் உக்ரைன் நாட்டில் அதிகரித்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. உக்ரைன் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் ஆட்சியைக் கவிழ்க்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காகவே ரஷ்யா உளவாளிகள் செயல்பாடுகள் உக்ரைன் நாட்டில் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

11 அரசியல் கட்சிகள்
இந்நிலையில், ரஷ்யா உடன் தொடர்புள்ளதாகக் கூறி 11 அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை சஸ்பெண்ட் செய்ய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, உக்ரைன் நாடாளுமன்றத்தில் 450இல் 44 இடங்களைப் பெற்று இருக்கும் பிளாட்ஃபார்ம் ஆஃப் லைப் என்ற கட்சியும் தடை செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் விக்டர் மெட்வெட்சுக் ரஷ்ய அதிபர் புதினுடன் பல ஆண்டுகளாக நட்புறவு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல மேலும் 10 முக்கிய கட்சிகளையும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சஸ்பெண்ட் செய்துள்ளார்.

ராணுவ சட்டம்
உக்ரைன் படையெடுப்பிற்கு முன்னரே, ஜெலன்ஸ்கி ஆட்சியை கவிழந்துவிட்டு, ரஷ்ய ஆதரவு தலைவர் ஒருவரை அதிபர் ஆக்க புதின் திட்டமிட்டு வருவதாகப் பிரிட்டிஷ் உளவுத் துறை அதிகாரிகள் எச்சரித்து இருந்த நிலையில், இந்த தடை உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோவில், "ரஷ்யாவுக்கும் நமது நாட்டில் இருக்கும் சில அரசியல் கட்சிகளுக்கும் இடையேயான தொடர்பு காரணமாக நம் நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் ராணுவச் சட்டத்தின் கீழ் சஸ்பெண்ட் செய்யப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

திட்டம் நிறைவேறாது
மேலும், தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி நாட்டை பிளவுபடுத்த சில அரசியல் சக்திகள் செயல்படுவதாகவும் இருப்பினும் அவர்கள் முயற்சிகள் ஒருபோதும் வெற்றியடையாது என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். உக்ரைன் போர் 20 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதிபர் ஜெலன்ஸ்கி இந்த உத்தரவு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
Recommended Video

ரஷ்ய உளவாளி
முன்னதாக, போர் ஆரம்பித்த சமயத்தில் இரு நாடுகளுக்கு இடையே போலந்து எல்லையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது உக்ரைன் பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவர் ரஷ்ய உளவாளி என்பதை உக்ரைன் பாதுகாப்பு அமைப்பு (Service of Ukraine) கண்டுபிடித்துள்ளனர். அவரை கைது செய்ய முயன்ற போது, அவர் தப்பியோட முயன்றதாகவும் அப்போது அவரை உக்ரைன் பாதுகாப்பு அமைப்பு சுட்டுக் கொன்றுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications