சுட்டுத் தள்ளப்பட்ட மலேசிய விமானத்தை சர்ச்சை பகுதிக்கு திருப்பிவிட்டது உக்ரைன் விமான கட்டுப்பாட்டு அ
மாஸ்கோ: மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 ஐ உக்ரைன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை சர்ச்சைக்குரிய டோனட்ஸ்க் பகுதிக்கு திருப்பி விட்டது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 17ம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 கிழக்கு உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேரும் பலியாகினர்.
உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவுப்படையினர் தான் விமானத்தை தாக்கியதாக உக்ரைன் அரசும், உக்ரைன் தாக்கியதாக ரஷ்யாவும் குற்றம் சாட்டியது. இது குறித்து சர்வதேச நிபுணர்கள் குழு விசாரித்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைனில் பிரச்சனைக்குரிய டோனட்ஸ்க் பகுதி வழியாக மலேசிய விமானத்தை உக்ரைன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை தான் திருப்பி விட்டுள்ளது என்று ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதர் சர்கின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
உக்ரைன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கிடையே நடந்த பேச்சு பற்றி எதுவும் தெரியவில்லை. மலேசிய விமானத்தை சர்ச்சைக்குரிய பகுதி வழியாக அவர்கள் ஏன் திருப்பிவிட்டார்கள் என்பதை அறிய அதிகாரிகளின் பேச்சு அடங்கிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்றார்.
விமானத்தை ரஷ்ய ஆதரவுப்படையினர் தான் தாக்கியிருக்கக்கூடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.