மனித உரிமை மீறல் விசாரணைக்கு முட்டுக்கட்டை: இலங்கைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையர் கடும் கண்டனம்
ஜெனிவா: மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையை விமர்சிப்பதும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவோரை தடுப்பதுமான இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயித் ராத் அல் ஹுசைன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் இந்த விசாரணையின் நம்பகத் தன்மை, நேர்மை மீது இலங்கை தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகிறது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயித் ராத் அல் ஹுசைன், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு தர முன்வரும் தனிநபர்களையும் இலங்கை அரசாங்கம் தடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இலங்கையின் இத்தகைய நடவடிக்கையானது ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவமதிக்கும் செயலாகும் என்றும் அவர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு ஆணைக்குழு திரும்பத் திரும்பக் கோரியபோதிலும் அதனை ஒரேயடியாக இலங்கை அரசாங்கம் நிராகரித்து வருகிறது.
இலங்கையின் இறுதிப் போரில் இருதரப்பினரும் சர்வதேச சட்டங்களை கடுமையாக மீறியதாக பரந்துபட்ட குற்றச்சாட்டுக்கள் இருக்கும் நிலையில், இலங்கை அங்கு ஒரு சுயாதீனமான புலன் விசாரணை நடைபெறுவதை தொடர்ச்சியாக தடுத்து வருகின்றது என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கையின் சமூக அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு, துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர். இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்ச சுவரானது, ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு மக்கள் சாட்சியமளிப்பதை சந்தேகத்துக்கு இடமின்றி தடுக்கிறது என்றும் அவர் சாடியுள்ளார்.
இதனால் இந்த விசாரணை தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயித் ராத் அல் ஹுசைன் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications