படு வேகமாகப் பரவி வருகிறது "ஜிக்கா" வைரஸ்... இந்தியாவுக்கும் ஆபத்து என்கிறது "ஹூ"
ஜெனீவா: மனிதனின் நரம்பு மண்டலம் மற்றும் மூளை வளர்ச்சியை பாதிக்கும் ஜிக்கா வைரஸ் இந்தியாவுக்கும் ரவும் ஆபத்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரேசில் நாட்டில் இந்த வைரஸ் மூலம் தொற்று நோய் பரவுவது கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்டது.
ஏ.டி.எஸ் வகை கொசுக்கள் மூலம் பரவும் இந்நோயால் அமெரிக்கா உள்ளிட்ட 23 நாடுகளில் சுமார் 4000 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தடுப்பு மருந்துகள் இல்லை:
இதனையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜிக்கா வைரஸால் ஏற்படும் பாதிப்பிற்கு தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதால், அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் அதிகம்:
டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் ஏ.டி.எஸ் வகை கொசுக்கள் மூலம் ஜிக்கா வைரஸ் பரவுவதாக கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, இந்த வகை கொசுக்கள் ஏற்கனவே உள்ள இந்தியா போன்ற நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவும் என எச்சரித்துள்ளது.
கர்ப்பிணிகளுக்கு ஆபத்து:
டெங்கு, சிக்கன்குனியா பாதிப்பு உள்ளவர்களை முழுமையாக பரிசோதிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. கொசுக்கள் மூலம் மட்டுமின்றி பாலுறவு மூலமும் ஜிக்கா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. நரம்பு மண்டலம் மற்றும் மூளை வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் ஜிக்கா வைரஸ், கர்ப்பிணி பெண்களை தாக்கினால் கருவில் உள்ள குழந்தைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
சிறிய தலை குழந்தைகள்:
பாதிக்கப்பட்ட குழந்தை மூளை வளர்ச்சி குறைந்து சிறிய தலையுடன் பிறக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பின் மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குரங்கிலிருந்து கண்டுபிடிப்பு:
மிகவும் ஆபத்தான இந்த வைரஸ் 1947 இல் பிரேசில் நாட்டில் ஜிக்கா வடப்பகுதியில் குரங்கு ஒன்றின் உடலில் இருந்தது கண்டறியப்பட்டது. அவப்போது வேகமாக பரவும் ஜிக்கா வைரஸின் தாக்கம் தற்போது மிக அதிகமாக இருப்பதால், பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் பெண்கள் கருவுறுவதை 2018 ஆம் ஆண்டு வரை தள்ளிபோட அறிவுறுத்தப்பட்டுள்ளது.