உறவை மேம்படுத்த வாஷிங்டன், ஹவானாவில் தூதரகங்கள் திறக்கும் யு.எஸ்., கியூபா
நியூயார்க்: அமெரிக்கா மற்றும் கியூபா இடையேயான உறவை புதுப்பிக்கும் வகையில் இருநாடுகளிலும் தூதரகங்களை அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
அமெரிக்கா, கியூபா இடையேயான உறவு 1961ம் ஆண்டில் முறிந்தது. அதில் இருந்து இரு நாடுகளும் எதிரிகளாகிவிட்டன. இந்நிலையில் 1977ம் ஆண்டு அமெரிக்காவில் கியூபாவின் தூதரகம் போன்ற அமைப்பும், கியூபாவில் அமெரிக்க தூதரகம் போன்ற அமைப்பும் சுவிட்சர்லாந்தின் பாதுகாப்போடு நடந்து வந்தது. ஆனால் அவை தூதரகங்கள் போன்று இல்லை.

இந்நிலையில் தான் கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முயற்சியால் இருநாடுகளுக்கு இடையேயான பகைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் ஒபாமாவும், கியூபா அதிபர் ரவூல் காஸ்ட்ரோவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் பட்டியலில் இருந்து கியூபாவின் பெயரை அமெரிக்கா நீக்கியது.
இந்த சூழலில் கியூபா தலைநகர் ஹவானாவில் முறைப்படி அமெரிக்க தூதரகத்தை அமைப்பது குறித்து ஒபாமா அறிவிப்பு வெளியிட உள்ளார். அந்த தூதரகம் இம்மாதத்தில் துவங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதே போன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கியூபா தனது தூதரகத்தை துவங்க உள்ளது.
முன்னதாக 1959ம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோவும், அவரது சகோதரர் ரவூலும் சேர்ந்து நடத்திய புரட்சியால் அமெரிக்கா துணையுடன் கியூபாவை ஆண்டு வந்த அதிபர் புல்ஜென்சியோ படிஸ்டாவின் பதவி பறிபோனது. இதையடுத்து தான் அமெரிக்கா கியூபா இடையேயான உறவு கசந்தது.












Click it and Unblock the Notifications