அமெரிக்க தேர்தல் 2016: சிலிக்கான் வேலி இந்தியர்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஆர்.ஓ. கன்னா
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க பிரதிநிதி சபை தேர்தலில் போட்டியிடும் இந்திய அமெரிக்கரான ஆர்.ஓ. கன்னா இந்திய அமெரிக்க சமூகத்தின் ஆதரவை எதிர்பார்த்து நிற்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் வேளையில் அதை பற்றி தான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அமெரிக்க பிரதிநிதி சபை தேர்தலில் இந்திய-அமெரிக்கரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஆர்.ஓ. கன்னா போட்டியிடுகிறார். ஆசிரியர், வழக்கறிஞர், அமெரிக்க வணிகத் துறையின் கூடுதல் துணை செயலாளராக அவர் இருந்துள்ளார்.
கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய சமூகம் மீது அவர் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். இந்திய சமூகத்தினர் அதிக அளவில் முன்வந்து வாக்களிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் அவர் ஒன்இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இந்தியர்கள் ஜனநாயக கட்சியால் ஈர்க்கப்பட்டு உங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள் என ஏன் நினைக்கிறீர்கள்?
எனக்கு கல்வி தான் முக்கியம். என்னைப் போன்று இந்திய அமெரிக்க சமூகமும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. கல்லூரி செலவை குறைக்க, பொது பள்ளிகளுக்கு கூடுதல் நிதி அளிக்க, வகுப்பறைகளில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்த நான் விரும்புகிறேன். இதை பல இந்திய அமெரிக்கர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். புலம்பெயர்பவர்கள் மற்றும் அனைத்து மத மக்களை வரவேற்கும் நாடாக அமெரிக்கா ஆக என்னைப் போன்றே இந்திய அமெரிக்க சமூகத்தினரும் விரும்புகிறார்கள்.
2011ம் ஆண்டு கலிபோர்னியாவில் தான் அதிக அளவில் இந்தியர்கள் இருந்தார்கள். அதை தொடர்ந்து நியூ ஜெர்சியில் இருந்தார்கள். நீங்கள் வெற்றி பெற்றால் இந்தியர்களுக்கு என்ன பயன்?
இந்திய அமெரிக்க சமூகத்தினர் தங்களின் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். வளைகுடா பகுதியில் 2 லட்சம் இந்தியர்கள் இருந்தும் வெறும் 25 சதவீதம் பேர் தான் வாக்களிக்கிறார்கள். இம்முறை வரலாறு காணாத அளவு வாக்குகள் பதிவாக வேண்டும் என எதிர்பார்க்கிறோம். வரும் ஜூன் மாதம் 7ம் தேதி நடக்கும் தேர்தலில் அதிக அளவில் இந்திய அமெரிக்கர்கள் வாக்களிப்பார்கள் என நம்புகிறோம்.
இந்த நாட்டில் தங்களால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இளம் இந்திய அமெரிக்கர்களுக்கு அளித்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். நான் வெற்றி பெற்றால் அது பொது வாழ்வில் ஈடுபட பல இந்திய அமெரிக்கர்களை ஊக்குவிக்கும்.
நீங்கள் எதைக் கூறி வாக்கு கேட்க உள்ளீர்கள்? இந்திய வாக்குகளை பெற நீங்கள் ஏதாவது செய்துள்ளீர்களா?
கடந்த தேர்தலில் 83 சதவீத இந்திய அமெரிக்கர்களின் வாக்குகள் கிடைத்தது. பிரச்சனை என்னவென்றால் 25 ஆயிரம் இந்திய அமெரிக்கர்களில் 10 ஆயிரம் பேர் தான் வாக்களித்தனர். இம்முறை ப்ரீமான்ட், கூபர்டினோ, மில்பிடாஸ், நியூவார்க், சான்டா கிளாரா, சன்னிவேலில் உள்ள அனைத்து இந்திய அமெரிக்கர்களும் வாக்களிப்பார்கள் என நம்புகிறேன். இம்முறை வரலாறு காணாத அளவுக்கு வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
எந்த அடிப்படையில் இந்திய அமெரிக்கர்கள் உங்களுக்கு வாக்களிப்பார்கள்?
தங்களின் பாரம்பரியத்தை பெருமையாக நினைப்பவர்கள் பிரதிநிதியாக வேண்டும் என இந்திய அமெரிக்க சமூகம் எதிர்பார்க்கிறது. என் இந்து மத நம்பிக்கை மற்றும் பிற மதங்கள் மீது நான் வைத்திருக்கும் மரியாதை பற்றி பேச தயங்க மாட்டேன். என் தாத்தா பற்றியும் பேசுவேன். இந்திய சுதந்திரத்திற்காக அவர் நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி குறித்த அவரின் ஆர்வத்தின் தாக்கம் என்னிடம் இருக்கும்.
இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அது பற்றி என்ன செய்யலாம்?
இந்திய அமெரிக்க சமூகத்தை புரிந்து கொள்ளாததால் அவர்களுக்கு எதிராக வெறுப்பு சம்பவங்கள் நடக்கின்றன. அதை மாற்ற அதிகாரத்தில் நாம் இருக்க வேண்டும். வாக்களிக்க மக்கள் வேண்டும். இந்திய அமெரிக்கர்களால் நாட்டிற்கு ஏற்படும் நன்மைகள் பற்றி புரிந்து கொள்பவர்கள் அமெரிக்க காங்கிரஸில் அதிக அளவில் இருக்க வேண்டும். 2016ம் ஆண்டு எனக்கு கிடைக்கும் வெற்றி இந்திய அமெரிக்க சமூகத்திற்கு வரலாறாக இருக்கும். வரலாறு படைக்க அனைவரின் வாக்குகள் மற்றும் முடிந்த அளவு நிதியுதவி தேவைப்படுகிறது. மேலும் விபரம் அறிய www.rokhanna.com என்ற எனது இணையதளத்தை பாருங்கள்.