முடிந்ததா ட்ரம்பின் சகாப்தம்? அதிபர் தேர்தல் பற்றிய நேரடி நிலவரம்
வாஷிங்டன்(யு.எஸ்): வெள்ளிக்கிழமை வெளியான சர்ச்சைக்குரிய 2005 ஆம் ஆண்டு பதிவான ட்ரம்பின் வீடியோ, அமெரிக்க அதிபர் தேர்தலை புரட்டிப் போட்டுள்ளது.
அதிபர் தேர்தலுக்கான இரண்டாவது விவாதம் முடிந்துள்ள நிலையில், அதன் தாக்கம், ட்ரம்ப் வீடியோ ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து அமெரிக்காவில் வசித்து வரும் டி.கோபிநாத், வாஷிங்டனிலிருந்து நேரடி நிலவரத்தை ஒன் இந்தியா வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்கிறார்.
வாஷிங்டன் வட்டார தமிழ்ச் சங்கத்தின் தலைவராக பணியாற்றிவர் கோபிநாத். நேஷனல் கவுன்சில் ஆஃப் ஏசியன் இந்தியன் அசோஷியேனில் உப தலைவராக தற்போது பணியாற்றி வருகிறார். மேலும், தலைநகரில் அமெரிக்க - இந்திய விவகாரங்கள் பலவற்றில் பின்புலத்தில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. இ
இனி கோபிநாத்...
"பெற்ற மகளையே கொச்சையாகப் பேசிய தந்தையை இப்போது அமெரிக்கா கண்டுள்ளது. அமெரிக்கர்கள் பாலியல் விசயத்தில் வெளிப்படையானவர்கள்தான் என்றாலும் குடும்ப உறவுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். குடும்பம் என்று வந்து விட்டால், அவர்கள் இந்தியர்களுக்கு இணையானவர்கள் என்றே சொல்லலாம்.
அப்படிப்பட்டவர்கள் மத்தியில், தான் பெற்ற பெண்ணின் அங்கங்களை மோசமாக வர்ணிக்கும் தந்தையை யாராவது ஏற்றுக்கொள்வார்களா? அதுவும் நாட்டின் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் விவிஐபி தந்தையை? முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் அலிசியா மச்சாடோ, கொஞ்சம் எடை அதிகமாகி விட்டார் என்பதற்காக அவரைப் பன்றி என்று அழைத்ததையே பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
ட்ரம்பின் மனைவியே தன் கணவரின் வீடியோ பேச்சு கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். ஏற்கெனவே திருமணமான பெண்ணுடன் உறவு கொள்ள பகீரத முயற்சி செய்தேன் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். அப்படிச் சொல்லும் போது அவருக்கு வயது 59. வாழ்க்கையில் முதிர்ச்சி நிலையில் இருக்க வேண்டிய வயதில், ப்ளேபாயாக வலம் வந்து கொண்டிருந்தவருக்கு, கடந்த 11 ஆண்டுகளில் தலைவருக்கான என்ன முதிர்ச்சி வந்து இருக்கும் என்ற கேள்வி அமெரிக்கர்களிடம் எழுந்துள்ளது.
இன்னும் எப்படி நம்புவது?
இந்த தேர்தல் காலத்தில் முதன் முறையாக மன்னிப்பு கேட்டுள்ளார் ட்ரம்ப். ஒரு முறை அறிக்கையாகவும், இரண்டாம் தடவை வீடியோ மூலமாகவும் கேட்டுள்ளார். மன்னிப்புக் கேட்ட அதே தொனியில் ஹிலரியை விளாசியதை யாரும் ரசிக்க வில்லை.
கடந்த பத்து ஆண்டுகளில் தான் சொன்ன பலவற்றிக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்கிறேன் என்கிறார் ட்ரம்ப். அப்படி என்றால் கடந்த ஆண்டுகளில் அவர் சொன்ன எதை நம்புவது? ஒரு பிரபலம் என்பதால் பெண்களை எப்படி வேண்டுமானாலும் கையாளலாம் என்று கூறியிருக்கிறார்.
உலகத்தின் நம்பர் ஒன் நாடான அமெரிக்க அதிபர் என்ற அதிகாரம் மிக்க பதவி கிடைத்து விட்டால், பெண்களுக்கு இவரது ஆட்சியில் பாதுகாப்பு இருக்குமா? என்றும் அமெரிக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சாமானிய அமெரிக்கர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட, ட்ரம்பின் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ், ஒரு தந்தையாகவும் கணவனாகவும் ட்ரம்பின் வீடியோ பேச்சுகள் என்னை காயப்படுத்தி விட்டன என்று கருத்து தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற சபாநாயகர் பால் ரயன், செனட் அவைத் தலைவர் மிட்ச் மெக்கனல் ஆகியோர் ட்ரம்புக்குக் கொடுத்த ஆதரவை விலக்கிக் கொண்டனர்.
அமெரிக்கர்களால் பெரிது மதிக்கப்படும், முன்னாள் அதிபர் வேட்பாளரும், மூத்த செனட் உறுப்பினருமான ஜான் மெக்கய்னும், தனது ஆதரவை விலக்கிக் கொள்வதுடன், ட்ரம்புக்கு வாக்களிக்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்..
மேலும் மேரிலாண்ட் கவர்னர் லேரி ஹோகன், உட்பட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட குடியரசுக் கட்சியைச் சார்ந்த முக்கிய தலைவர்கள், ட்ரம்புக்கு ஆதரவு தரப்போவதில்லை, வாக்களிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
பெண்களை கடவுளாக பார்க்கும் இந்திய அமெரிக்க சமுதாயத்தினர் உட்பட பெரும்பாலனான அமெரிக்கர்கள் ட்ரம்பின், பெண்களை இழிவுபடுத்தும் பேச்சை ரசிக்கவில்லை. அவர்கள் அனைவரும் ட்ரம்பை புறக்கணிக்கும் மன நிலைக்கு வந்து விட்டனர்
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், மீண்டு வரமுடியாத பள்ளத்தில் விழுந்து விட்டார் ட்ரம்ப். அவரது அரசியல் வாழ்க்கையின் அஸ்தமனம் தொடங்கிவிட்டது. நவம்பர் 8 ம் தேதி தேர்தலுடன் அது முடிந்து விடும் என்கிறார்கள் அதிபர் தேர்தலைக் கூர்ந்து நோக்குபவர்கள்.