அமெரிக்க ஏர் மார்ஷலுக்கு ‘எபோலா’ ஊசி போட்ட மர்ம நபர்- நைஜீரியாவில் பரபரப்பு
அபுஜா: அமெரிக்க ஏர் மார்ஷலுக்கு நைஜீரியாவில் மர்ம மனிதன் ஊசி மூலம் எபோலா வைரசை செலுத்தியதாகவும், சம்பந்தப்பட்ட ஏர் மார்ஷல் தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயங்கர உயிர்க்கொல்லி நோயான எபோலா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 1800க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். இந்நோயின் தாக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படுகிறது. இந்நோய்க்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் சர்வதேச சுகாதார அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளது.
இதனால் எபோலா நோய்ப் பாதிப்புள்ள நாடுகளில் பயணம் செய்ய ஐக்கிய நாடுகள் தடை விதித்து உள்ளன. மேலும், அனைத்து விமான நிலையங்களிலும் விமான பயணிகள் நன்கு சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நோயை எதிர்த்து போராட 600 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் என ஐ.நா கூறி உள்ளது. இந்நோய்க்கான தடுப்பு மற்றும் குணமாக்கும் மருந்து கண்டறியும் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த நிலையில் நைஜிரியா சென்றிருந்த அமெரிக்க ஏர் மார்ஷலுக்கு மர்மமனிதன் ஒருவன் ஊசி மூலம் எதையோ உட்செலுத்தியுள்ளான். நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் உள்ள லகோஸ் விமான நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஊசி போட்ட மர்ம நபர் தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஊசி மூலம் செலுத்தப்பட்டது எபோலோ வைரசாக இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. எனவே, உடனடியாக ஏர் மார்ஷல் தனி விமானத்தில் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார்.
ஹூஸ்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனி அறையில் ஏர் மார்ஷல் அனுமதிக்கப் பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுவரை ஏர் மார்ஷலுக்கு எபோலா நோய்க்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என்றும், தொடர்ந்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஏர் மார்ஷலுக்கு ஊசி போட்ட மர்மநபர் குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. பலதரப்பட்ட மக்கள் குவியும் விமான நிலையத்தில் மர்ம மனிதன் ஏர் மார்ஷலுக்கு எபோலோ ஊசி போட்டதாக பரவிய தகவலால் பொதுமக்கள் மேலும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.