உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு பின்னடைவு.. அடுத்தடுத்த நகரங்களுக்கு முன்னேற முடியாமல் திணறல்! என்னாச்சு?
லண்டன்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போர் குற்றவாளி என அமெரிக்க நாடாளுமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை கொண்ட நோட்டோ அமைப்பில் சேர விரும்பியதற்காக உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
உக்ரைனின் கார்கீவ் நகரை எளிதில் கைப்பற்றிய ரஷ்ய படையினர் அடுத்தடுத்த நகரங்களுக்கு முன்னேற முடியாமல் தடுமாறி வருகின்றனர்.
"போர் குற்றவாளி புதின்.." அமெரிக்க செனட் சபையில் நிறைவேறிய தீர்மானம்! விசாரணைக்கு வலியுறுத்தல்
21 நாட்களாக தொடரும் போர்
போர் தொடங்கி 21 நாட்களாகியும் தலைநகர் கீவை கைப்பற்ற இயலாமல் ரஷ்ய படைகள் திணறி வருகின்றன. இதுகுறித்து பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், "உக்ரைன் போரில் ரஷ்யா படைகளையும், தளவாடங்களையும் பெரும் அளவில் இழந்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து படை வீரர்களை அழைத்து வந்து போரில் ஈடுபடுத்த முயற்சிக்கிறது.
ரஷ்யாவுக்கு தொடரும் சவால்
ரஷ்ய படையினரின் தாக்குதல்களுக்கு உக்ரைனும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. நாட்கள் செல்ல செல்ல ரஷ்யா கூடுதல் சவால்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக சிரியாவிலிருந்து 40,000 போர் வீரர்களை அழைத்து வந்து உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்து வைத்துள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
போர் குற்றவாளி புதின்
இதனிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு போர்குற்றவாளி என அமெரிக்க நாடாளுமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பல்வேறு கருத்து வேறுபாடுகளை கொண்ட அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் தீர்மானங்கள் பெரும்பாலும் நிறைவேறாது. ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து கருத்து வேறுபாடுகளை மறந்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.
பேச்சுவார்த்தைக்கு ரெடி... ஆனால் தளவாடங்களும் வேண்டும்
தொடரும் போர் குறித்து உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். ஆனால், சாத்தியப்படக்கூடிய வகையில் எதார்த்தமான கோரிக்கைகளை ரஷ்யா முன்வைக்க வேண்டும். உக்ரைனின் நலனுக்காக பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எடுக்க அவகாசம் வழங்க வேண்டும். உக்ரைன் வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிப்பதுடன், ரஷ்ய படைகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள கூடுதல் போர் தளவாடங்கள் வேண்டும்."
உக்ரைன் தலைநகரில் அண்டை நாட்டு பிரதமர்கள்
ரஷ்யா நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் சேதமடைந்து இருக்கும் உக்ரைன் தலைநகர் கீவுக்கு அதன் அண்டை நாடுகளான போலந்து, செக் குடியரசு, ஸ்லோவேனியா தலைவர்கள் சென்றனர். அவர்களின் வருகைக்கு நன்றி தெரிவித்த உக்ரைன் அதிபர், இப்படிப்பட்ட அண்டை நாட்டு நண்பர்களுடன் சேர்ந்து போரில் நிச்சயமாக அவர்களை தோற்கடிக்க முடியும் என்றார்.
Recommended Video
போலந்து பக்கபலமாக நிற்கும்
ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் உக்ரைனுக்கு என்றும் துணை நிற்போம் என போலந்து பிரதமர் மடேஸ் மொராவியேகி தெரிவித்துள்ளார். "உக்ரைனை நிச்சயமாக நாங்கள் தனித்து விட்டுவிட மாட்டோம். உக்ரைன் தங்களுக்காக மட்டுமின்றி அண்டை நாடுகளின் பாதுகாப்புக்காகவும் போராடுகிறது." என அவர் கூறினார்.