தீவிரவாத அச்சுறுத்தல்... வெளி நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
நியூயார்க்: பாரீஸ் தாக்குதலைத் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் பீதி தொடர்வதால், சர்வதேச சுற்றுலா சென்றுள்ள தங்கள் நாட்டு பயணிகள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 13ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். 350 பேர் காயம் அடைந்தனர். இந்தத் தாக்குதல் உலகையே அதிர்ச்சியில் உறையச் செய்தது.
அதனைத் தொடர்ந்து சிரியாவில் தங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு பிரான்ஸின் கதி தான் ஏற்படும் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வீடியோ வாயிலாக மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் அமெரிக்காவில் வாஷிங்டன் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து அமெரிக்காவின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, மற்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள அமெரிக்கப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரே இடங்களில் கூட்டமாக இருப்பதை தவிர்க்குமாறும் அறிவுரை கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2011ம் ஆண்டு அல் கொய்தா தீவிரவாதத் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட போதும், இரட்டை கோபுரத் தாக்குதலின் 10ம் ஆண்டு நினைவு நாளின் போதும் இதே போன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.