யு.எஸ். பத்திரிகையாளரை மீட்க முயன்று தோல்வியுற்ற அமெரிக்க ராணுவம்!
வாஷிங்டன்: ஈராக்கின் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலி உள்பட அனைத்து அமெரிக்க பிணையாளிகளையும் மீட்க இந்த வருடத் தொடக்கத்தில் அமெரிக்க ராணுவம் முயற்சித்துள்ளது.
ஆனால் அவர்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியாததால் அந்த முயற்சி தோல்வியுற்றதாக அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இவர்களை சிரியாவில் சிறை வைத்திருந்ததை உறுதி செய்த அமெரிக்க ராணுவத்தால் அவர்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. இதனால் அந்த முயற்சி பலன் தராமல் போயுள்ளது.
விமானப்படை உதவியுடன்
வான்வெளி மற்றும் தரை மார்க்கமாக அமெரிக்கப் படைகள் தீவிர தேடுதல் முயற்சியில் ஈடுபட்டதாகவும், ஆனால் பிணையாளிகள் வைக்கப்பட்டிருந்த இடம் சரியாக தெரியாமல் போனதால் அந்த முயற்சி தோல்வி அடைந்ததாகவும் பென்டகன் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
அதிரடி ரெய்டு தோல்வி
சிரியாவில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அமெரிக்கப் படையினர் அதிரடியாக சோதனையிட்டதாகவும், அங்கு பிணைக் கைதிகள் யாரும் இல்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஒபாமா உத்தரவின் பேரில்
இதுகுறித்து ஒபாமாவின் உதவியாளர்களில் ஒருவரான லிசா மோனாகோ கூறுகையில், அதிபர் ஒபாமாவின் உத்தரவின் பேரில் இந்த மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிடிக்கப்பட்ட பிணையாளிகளின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று தகவல் கிடைத்ததால், இந்த முயற்சிக்கு அதிபர் உத்தரவிட்டார். ஆனால் அது வெற்றி பெறவில்லை என்றார் லிசா.
தலை துண்டித்துக் கொலை
தீவிரவாதிகளால் பிடித்துச் செல்லப்பட்ட அமெரிக்க பிணையாளிகளில் ஒருவரான பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலி தலை துண்டித்துக் கொல்லப்பட்டு அந்த வீடியோ காட்சிகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
இன்னொருவின் உயிருக்கு ஆபத்து
அதேபோல இன்னொரு அமெரிக்கப் பத்திரிகையாளரை அடுத்துக் கொல்லப் போவதாக ஏற்கனவே தீவிரவாதிகள் எச்சரித்துள்ளதால் அவரது நிலை குறித்து அமெரிக்காவில் அச்சம் எழுந்துள்ளது.