அண்டார்டிகா பனி மலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயர் சூட்டிய அமெரிக்கா
நியூயார்க்: இந்திய-அமெரிக்க விஞ்ஞானியான அகௌரி சின்ஹாவை கௌரவிக்கும் விதமாக அமெரிக்கா அண்டார்டிகாவில் உள்ள மலை ஒன்றுக்கு சின்ஹா என்று பெயர் வைத்துள்ளது.
அமெரிக்காவின் மின்னசோடா மாநிலத்தில் உள்ள மின்னசோடா பல்கலைக்கழகத்தில் இருக்கும் மரபணுவியல் துறை பேராசிரியர் இந்திய-அமெரிக்கரான அகௌரி சின்ஹா. விஞ்ஞானியான அவர் 1972 மற்றும் 1974ம் ஆண்டுகளில் அண்டார்டிகாவின் பெல்லிங்ஸ்ஹாசென் மற்றும் அமன்ட்சென் கடல்களில் வசித்த திமிங்கலம், பறவைகள் மற்றும் சீல்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்தார்.
அவரின் ஆய்வை கௌரவிக்கும் விதமாக கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள மலை ஒன்றுக்கு அமெரிக்கா சின்ஹா என்று பெயர் வைத்துள்ளது.
இது குறித்து சின்ஹா கூறுகையில்,
சின்ஹா மலையை யார் வேண்டுமானாலும் கூகுள் அல்லது பிங் செய்து பார்க்க முடியும். உங்கள் திறமையை உலகிற்கு காண்பியுங்கள். மக்களை தொடர்பு கொள்ள அஞ்சாதீர்கள். எந்த வாய்ப்பையும் தவற விடாதீர்கள்.
நான் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் என் சொந்த கிராமமான சுராமன்பூருக்கு செல்வேன். பிப்ரவரியில் மின்னசோடாவில் நிலவும் குளிரில் இருந்து தப்பிக்க இந்தியாவுக்கு செல்வேன். அங்கு நான் என் உறவினர்கள், கிராம நண்பர்களை சந்திப்பேன் என்றார்.
பீகாரைச் சேர்ந்த சின்ஹா உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகத்தில் 1954ம் ஆண்டு பி.எஸ்.சி. முடித்தார். பின்னர் 1956ல் பாட்னா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. விலங்கியல் படிப்பை முடித்தார். அன்டார்டிகாவில் வசிக்கும் சீல்களின் இனப்பெருக்க முறை குறித்து ஆய்வு செய்ய அவருக்கு நேஷனல் சயன்ஸ் பவுன்டேஷன் அன்டார்டிக் புரோகிராம் அழைப்பு விடுத்தது.
அவர் அமெரிக்காவுக்கு செல்லும் முன்பு உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி கல்லூரியில் 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 1961ம் ஆண்டு ஜூலை மாதம் வரை விலங்கியல் துறையில் பணியாற்றினார்.
1739ம் ஆண்டு ஈரானின் நாதிர் ஷா டெல்லி மீது படையெடுத்தபோது சின்ஹாவின் மூதாதையர்கள் டெல்லியில் இருந்து பீகார் மாநிலத்தில் உள்ள பக்சாருக்கு இடம்பெயர்ந்தனர்.