ஹிலரி அதிபரானால் இந்தியாவுக்கு என்ன நன்மை? - டாக்டர் ராஜன் நடராஜன் பேட்டி
- இர தினகர்
வாஷிங்டன்(யு.எஸ்): மேரிலாண்ட் மாநில முன்னாள் துணைச் செயலாளரும், தற்போதைய போக்குவரத்து ஆணையருமான டாக்டர் ராஜன் நடராஜன் ஹிலரி க்ளிண்டனுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
இண்டோ அமெரிக்கன்ஸ் ஃபார் ஹிலரி க்ளிண்டன் (Indo American for Hillary Clinton) என்ற அமைப்பை உருவாக்கி, அமெரிக்கா முழுவதும் இந்தியன் அமெரிக்கர்களிடம் வாக்குச் சேகரித்து வருகிறார். அவருடைய ஆதரவாளர்களும் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறார்கள்.
இந்த படு பிஸியான நேரத்திலும் ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக சிறப்புப் பேட்டி அளிக்க இசைந்தார். டாக்டர் ராஜன் நடராஜன் ஏற்கனவே நமது வாசகர்களுக்குகு மிகவும் பரிச்சயமானவர். அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான அவரது சிறப்புப் பேட்டி:
ஒன் இந்தியா தமிழ் : இண்டோ அமெரிக்கன்ஸ் ஃபார் ஹிலரி க்ளிண்டன் என்ற அமைப்பை நீங்கள் நிறுவக் காரணம் என்ன?
டாக்டர் ராஜன் : இந்திய அமெரிக்கர்களின் ஆதரவை திரட்டுவதற்காக, அமெரிக்கா தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த அமைப்பை தொடங்கியுள்ளோம். என்னுடன் தமிழர்கள் உட்பட பல இந்தியர்களும் இதில் இணைந்து செயல்படுகிறார்கள். அதிபர் தேர்தலில் ஹிலரி க்ளிண்டனின் வெற்றிக்கு இந்திய அமெரிக்க சமுதாயத்தின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அமைப்பு செயல்படுகிறது. நாடு முழுவதும் இந்திய அமெரிக்கர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறோம்.
ஒன் இந்தியா தமிழ்: நீங்கள் ஏன் ஹிலரி க்ளிண்டனுக்கு ஆதரவு திரட்டுகிறீர்கள்.
டாக்டர் ராஜன் : நான் ஜனநாயகக் கட்சியைச் சார்ந்தவன். எங்கள் கட்சியின் வேட்பாளருக்கு தானே ஆதரவு திரட்ட முடியும். அது மட்டுமல்லாமல், ஹிலரி க்ளிண்டன் அதிபர் பதவிக்கு எல்லா தகுதிகளையும், அனுபவத்தையும் கொண்டவர்.
ஒபாமா ஆட்சியின் சாதனைகள் தொடரவும், மென்மேலும் வளர்ச்சிப் பாதையில் நடைபோடவும் ஹிலரி அமெரிக்க அதிபர் ஆக வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
ஒன் இந்தியா தமிழ்: ஹிலரி வெற்றி பெற்றால் எப்படிப்பட்ட ஆட்சி அமையும் என்று
எதிர்பார்க்கலாம்?
டாக்டர் ராஜன் : ஹிலரியின் வெற்றி நிச்சயக்கப்பட்ட ஒன்றாகும். அவருடைய தலைமையில், அமெரிக்காவில் வளர்ச்சி பெருகும். உலக நாடுகளில் அமைதி நிலை நாட்டப்படும்.
ட்ரம்ப் உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியவர். அவர் வெற்றி பெற்றால் அது ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும்தான் கொண்டாட்டமாக அமையும். உள் நாட்டிலும் வேற்றுமைகள் உருவாகி மக்கள் துண்டாடப்படுவார்கள்
உலக அமைதி நிலை நாட்டப்படும் போது அமெரிக்காவுக்கும் பரஸ்பர நன்மைகள் கிடைக்கும். அது ஹிலரி அதிபர் ஆனால் மட்டுமே நடக்கும்.
ஒன் இந்தியா தமிழ்: அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கான ஹிலரியின் திட்டங்கள் எப்படி இருக்கும் ?
டாக்டர் ராஜன் : அதிபர் புஷ் ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம் படு வீழ்ச்சி அடைந்திருந்தது. அதை மீட்டு வெற்றிகரமாக முன்னேற்றப்பாதையில் நடைபோட வைத்துள்ளார் அதிபர் ஒபாமா.
கடந்த 40 ஆண்டுகால ஆட்சியில் தற்போது வேலை இல்லாத் திண்டாட்டம் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஹிலரியின் திட்டங்கள் இந்த பொருளாதார வளர்ச்சியை இன்னும் அதிகரிக்கச் செய்யும். மில்லியன் கணக்கில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
புதிய தொழில் நுட்பங்களில் அதிக முதலீடு செய்யப்பட்டு புதிய வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பயனடையும். அமெரிக்க இந்திய தொழிலதிபர்களுக்கு இதன் மூலம் நன்மைகள் கிடைக்கும்.
ஹிலரி அமெரிக்க வளர்ச்சிக்கான தொலைநோக்கு திட்டங்கள் வகுத்துள்ளார். டொனால்ட் ட்ரம்பிடன் எந்த திட்டமும் இல்லை. அமெரிக்காவை அவமதித்து ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பதுதான் அவருடைய ஒரே திட்டம்.
ஒன் இந்தியா தமிழ்: ஹிலரி மீது நம்பிக்கை தன்மையற்றவர் என்ற குற்றச்சாட்டு பரப்பப் பட்டு வருகிறதே!
டாக்டர் ராஜன் : இது திட்டமிட்ட் அரசியல் சதி. குடியரசுக் கட்சியில் ஹிலரிக்கு இணையான வேட்பாளர்கள் இல்லை என்பதால், அவர் மீது அபாண்டமாக பழி சுமத்தி வருகின்றனர்.
வெளியுறவுச் செயலாளர் பதவியை விட்டு விலகிய நாள் முதல், அவர் அதிபர் வேட்பாளர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அப்போது முதலாகவே எதிர்க்கட்சியினர் அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றனர். உண்மையில் ஹிலரி க்ளிண்டன் மிகவும் வெளிப்படையானவர். அவரது வருமானவரி கணக்குகளை வெளிப்படையாக வெளியிட்டுள்ளார்.
இதுவரையிலும் போட்டியிட்ட அதிபர் வேட்பாளர்களில் வருமான வரி விவரங்களை வெளியிடாத ஒரே வேட்பாளர் ட்ரம்ப் மட்டுமே. இதன் மூலம் மட்டுமே ட்ரம்பின் நம்பிக்கைத் தன்மை தெளிவாக விளங்கும். அவரது ரகசிய தொடர்புகள், தொழில்கள் என முற்றிலும் புதிரானவர். அதிபர் பதவிக்கு தகுதி இல்லாதவர் ட்ரம்ப்.
ஒன் இந்தியா தமிழ்: பொதுவாக லத்தீன் இன மக்களின் குடியுரிமைப் பற்றி மட்டுமே ஜன நாயகக் கட்சி கவலைப்படுகிறது. இந்தியர்கள் உட்பட ஹெச் 1 விசாவில் வருபவர்களுக்கு குடியுரிமை கிடைப்பதில் பெரும் பின்னடைவு இருக்கிறது என்ற கருத்து உலவுகிறதே?
டாக்டர் ராஜன் : அமெரிக்கா பல நாடுகளிலிருந்தும் குடியேறியவர்களால் உருவாக்கப்பட்ட நாடு, குடியுரிமைக்கான திட்டங்களுக்கு ஹிலரி க்ளிண்டன் முன்னுரிமை கொடுக்கிறார்.
ஹெச் 1 விசாவில் திறமைகளின் அடிப்படையில் வருகின்றவர்களின் குடியுரிமைக்கும் ஹிலரி முன்னுரிமை கொடுப்பார்.
கணிணி உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்பத்தில் திறமையானவர்களின் பங்களிப்பு அமெரிக்க வளர்ச்சிக்குத் தேவை என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் ஹிலரி க்ளிண்டன்.
நீண்ட நாட்களாக காத்திருப்பில் இருக்கும் இந்தியர்களின் க்ரீன் கார்டு கனவுகளுக்கு ஹிலரி நிச்சயம் தீர்வு காண்பார்.
ஒன் இந்தியா தமிழ்: ஹிலரி ஆட்சியில் இந்தியாவுக்கும் அமெரிக்க இந்தியர்களுக்கும் என்ன நன்மை கிடைக்கும்.
டாக்டர் ராஜன் : ஹிலரி க்ளிண்டனின் நீண்ட கால இந்திய தொடர்பு பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முதல் பெண்மணியாகவும், வெளியுறவுத் துறை செயலாளராகவும் ஹிலரி அமெரிக்க - இந்திய உறவுக்கு மிகப்பெரிய பாலமாக இருந்துள்ளார்.
அவர் அதிபர் ஆகும் போது அமெரிக்க - இந்திய உறவு மென்மேலும் வலுப்படும். பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்ற வாய்ப்புகள் உருவாகும். ஹிலரியின் ஆட்சியில் அமெரிக்க இந்தியர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
ஒன் இந்தியா தமிழ்: உங்களுடைய தீவிர பிரச்சாரத்திற்கிடையே, ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக நேரம் ஒதுக்கி கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. உங்கள் முயற்சிகள் வெற்றி பெறவும், அரசியல் பயணம் வெற்றிகரமாக தொடரவும் வாழ்த்துகள்...
டாக்டர் ராஜன் : ஒன் இந்தியா தமிழுக்கும் எனக்குமான நீண்டகால தொடர்பை நீங்கள் அறிவீர்கள். புத்தாண்டில் ஹிலரி க்ளிண்டன் அதிபராக பதவியேற்கும் விழாவில் மீண்டும் சந்திப்போம். நன்றி.