"ரஷ்யாவுக்கு உதவினால் கடும் விளைவுகள்!" சீனாவுக்கு ஓப்பன் வார்னிங் கொடுத்த அமெரிக்கா! பரபர தகவல்
வாஷிங்டன்: உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு உதவினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எச்சரித்துள்ளார்.
Recommended Video
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 3ஆவது வாரமாகத் தொடர்கிறது. இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இதுவரை எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
இதன் காரணமாக ரஷ்யாவின் போர் நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக உக்ரைன் நகரின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து இப்போது ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
உக்ரைன்- ரஷ்யா போர், தேர்தலும் முடிஞ்சாச்சு.. உயரவில்லை பெட்ரோல் டீசல் விலை! மக்களுக்கு ஆறுதல்
உக்ரைன் போர்
இருப்பினும், இதுவரை இந்தப் போர் ரஷ்யாவுக்குப் பெரிய வெற்றி என்று சொல்லும் அளவுக்கு எதுவும் அமையவில்லை. உலகில் மிகப் பெரிய ராணுவங்களில் ஒன்றான ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் போராடி வருகின்றனர். கீவ், கார்கிவ், உள்ளிட்ட நகரங்களைக் கைப்பற்ற ரஷ்யா ராணுவம் தீவிரமாக முயன்று வருகிறது. இருப்பினும், உக்ரைன் வீரர்கள் அவர்களை முன்னேற விடாமல், சண்டையிட்டு வருகின்றனர். இதனால் உக்ரைன் போர் இடைவிடாமல் தொடர்ந்து வருகிறது.
சீனாவிடம் உதவி
உக்ரைன் ராணுவம் இந்தளவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என ரஷ்யா துளியும் எதிர்பார்க்கவில்லை. இதனால் ரஷ்ய அதிபர் புதின் கடும் அதிருப்தியில் உள்ளார். மேலும், ரஷ்யப் புலனாய்வுத் துறையின் முக்கிய தலைவர்களை புதின் வீட்டுச்சிறையில் வைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூட தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சீனாவிடம் இருந்து ரஷ்யா ராணுவ உதவிகளைக் கோரியுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். என்ன மாதிரியான ராணுவ உதவிகளைக் கோரியுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
அமெரிக்கா எச்சரிக்கை
இந்நிலையில், அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் போர் காரணமாக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க ரஷ்யாவுக்கு உதவினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். இந்த போர் தொடங்கும் முன்னரே உக்ரைன் மீது சில ராணுவ நடவடிக்கையை எடுக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதையே சீனா அறிந்திருக்கும் என தாங்கள் கருதுவதாகவும் இருப்பினும் இதன் தீவிர தன்மையை அவர்கள் புரிந்து கொள்ளத் தவறி இருக்கலாம் என ஜேக் சல்லிவன் தெரிவித்தார்.
கடும் விளைவுகள்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் சீனாவுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். பொருளாதாரத் தடைகள் தவிர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டாலோ அல்லது ரஷ்யாவுக்கு ஆதரவான முடிவுகளை எடுத்தாலோ கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த பொருளாதாரத் தடைகளில் இருந்து ரஷ்யா தப்ப சில நாடுகள் வாய்ப்பு அளிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்றும் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை
அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ரோமில் சீனாவின் உயர்மட்ட ராஜதந்திரி யாங் ஜீச்சியை சந்தித்துப் பேச உள்ளார். இந்தச் சந்திப்பின் போது உக்ரைன் போர் குறித்தும் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் இருவரும் ஆலோசிக்க உள்ளனர். ஆசியப் பிராந்தியத்தின் பாதுகாப்பு சர்வதேச பாதுகாப்பு ஆகியவை இந்த உக்ரைன் போரால் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இருவரும் விவாதிக்க உள்ளனர். அதேநேரம் இந்த கூட்டத்தில் போர் தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்பட வாய்ப்பில்லை என்றும் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் அந்நாட்டு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.