கைவிடப்பட்ட கரு திசுக்களில் இருந்து தடுப்பு மருந்து.... போப் ஆண்டவர் புதிய யோசனை
வாடிகன்: கொரோனா தடுப்பு மருந்து கைவிடப்பட்ட கருக்களின் திசுக்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டாலும்கூட ரோமன் கத்தோலிக்கர்கள் அதைப் பயன்படுத்துவது தார்மீக ரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்கது தான் என்று வாடிகன் தெரிவித்துள்ளது.
உலகெங்கும் கொரோனா தொற்றின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில் போன்ற நாடுகளில் கடந்த சில வாரங்களாக வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்துள்ளது.
தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி
அமெரிக்காவின் ஃபைசர், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளன. அமெரிக்கா, பிட்டன் உள்ளிட்ட நாடுகள் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தத் தடுப்பு மருந்துகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கத்தோலிக்கர்கள் பயன்படுத்தலாமா?
இருப்பினும், இந்த கொரோனா தடுப்பு மருந்து கைவிடப்பட்ட கருக்களின் திசுக்களின் செல்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால் ரோமன் கத்தோலிக்கர்கள் இதை எடுத்துக் கொள்வது சரியா என்ற கேள்வி நிலவியது. ஏனென்றால், ரோமன் கத்தோலிக்கர்கள் கருக்கலைப்பை கொடும் குற்றமாகவே கருதுகின்றனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்து கைவிடப்பட்ட கருக்களின் திசுக்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டாலும்கூட ரோமன் கத்தோலிக்கர்கள் அதைப் பயன்படுத்தலாம் என்று வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து
போப் பிரான்சிஸின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், "மருத்துவ ரீதியாகப் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளதாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் ரோமன் கத்தோலிக்கர்கள் பயன்படுத்தலாம். கருக்கலைப்பிற்கும் இந்த தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் இதை நாம் பயன்படுத்தலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பிஷப்களின் குற்றச்சாட்டு
1960 மற்றும் 1970ஆம் ஆண்டுகளில் நடந்த இரண்டு கருக்கலைப்புகளில் இருந்து பெறப்பட்ட திசுக்களிலிருந்து பெறப்பட்ட செல் லைன்களை கொண்டே தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுவதாக அமெரிக்க பிஷப்புகள் குற்றஞ்சாட்டினர். அந்த திசுகளின் செல்களே அனைத்து வகையான தடுப்பு மருந்துகளுக்கும் பிரதியெடுக்கப்பட்டன என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
போப் ஆண்டவரின் பதில்
வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், "மற்ற முறைகளைப் பயன்படுத்தி தற்போதுவரை எந்தவொரு பாதுகாப்பான தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் தற்போதுள்ள கோவிட் -19 தடுப்பு மருந்துகள் பெறுவது தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கது.
மாற்று முறை தேவை
இருப்பினும், முற்றிலுமாக எந்தவொரு உயிரையும் அழிக்காமல் உருவாக்கும் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் முறையை மருத்து நிறுவனங்கள் கண்டறிய வேண்டும். மேலும், ஏழை நாடுகளுக்கும் தேவையான நேரத்தில் தடுப்பு மருந்துகள் கிடைப்பதை அரசாங்கங்களும் சர்வதேச அமைப்புகளும் உறுதி செய்ய வேண்டும்.
தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது கட்டாயம் இல்லை என்றாலும் பலவீனமானவர்களையும் எளிதில் பாதிக்கப்படுபவர்களையும் காக்க அனைவரும் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.