மர்மம் விலகியது.. ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பாக்தாதி சாகவில்லை.. 'போர்' தொடரும் என வீடியோவில் அறிவிப்பு
பெய்ரூட்: ஐந்து வருடங்களுக்கு முன்பு, ஈராக்கில், மசூதி ஒன்றில், அமர்ந்து கொண்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவன் தான்தான் என்று அறிவித்தவர் அபு பக்ர் அல்-பாக்தாதி.
இந்த அறிவிப்புக்கு பிறகு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு, உலகம் முழுக்க பல்வேறு ரத்த களறிகளை ஏற்படுத்தியது. பல உயிர்கள் கொல்லப்பட்டன. ஆனால், பாக்தாதி மட்டும் வெளி உலகில் தென்படவில்லை. அமெரிக்க அரசாங்கம் பாக்தாதி தலைக்கு 25 மில்லியன் டாலர் விலை நிர்ணயித்தது. ஆனால் பாக்தாதி, பலியாகிவிட்டதாக வதந்திகள் வேகமாக பரவின.
ஆனால், நேற்று திங்கள்கிழமை, பாக்தாதி மீண்டும், வீடியோவில் தோன்றி, சஸ்பென்ஸ்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கையில் ரைஃபிளுடன் அமர்ந்து அவர் பேசும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.

தீர்ப்பு நாள்
"நமது போர் தற்போது தேய்வு நிலையில் உள்ளது. ஆனால் எதிரிகளை ஒடுக்க, போர் தொடரும். ஜிகாத் என்பது, தீர்ப்பு நாள் வரும் வரை தொடரும்" என்று கூறியுள்ளார் பாக்தாதி. தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து பாக்தாதி இப்படி பேசும் வீடியோவை ஐஎஸ்ஐஎஸ் வெளியிட்டுள்ளது.

மோசமான தாக்குதலுக்கு வாய்ப்பு
இந்த வீடியோவை பார்த்த பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் கூறுகையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு சிரியா, ஈராக்கில் ஒடுக்கப்பட்டாலும், இன்னும் செயல்படுகிறது. பாக்தாதிதான் அதன் தலைவனாக செயல்படுகிறார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சர்வதேச நெட்வொர்க், பல நாடுகளிலும், மோசமான தாக்குதல்களை நடத்தும் வாய்ப்பு உள்ளது. இதுதான் இந்த வீடியோவின் உள் அர்த்தம் என்கிறார்கள், அவர்கள்.

தாக்குதல்
சவுபேன் சென்டர் என்ற உலகளாவிய பாதுகாப்பு ஆய்வு மையத்தின், மூத்த ஆய்வாளர் கொலின் பி.கிளார்க் கூறுகையில், "பாக்தாதி திடீரென வீடியோவில் தோன்றியிருப்பது, ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கும். தனிப்பட்ட நபர்கள் அல்லது சிறு குழுக்களுக்கும், தாக்குதலை நடத்தும் ஆவேசத்தை இவரது வீடியோ கொடுத்திருக்கும். இது உலகிற்கு ஆபத்தானது" என்றார்.

இலங்கை தாக்குதல்
இந்த வீடியோ, எப்போது, எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பதில் தெளிவில்லை. ஆனால், இலங்கையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் உட்பட பல்வேறு சமீபத்திய சம்பவங்கள் குறித்து, அந்த வீடியோவில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு வாரத்திற்குள்தான் இந்த வீடியோ எடுத்திருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

பெரும் தாக்குதல்
மத்திய கிழக்கு நாடுகளில் தனது தளத்தை ஐஎஸ்ஐஎஸ் இழந்துவிட்டது. ஆனால், உலகம் முழுக்க அது பரவியுள்ளது. 2015ம் ஆண்டு பாரீசில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு இலங்கையில் ஐஎஸ்ஐஎஸ் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. பாக்தாதி உயிரோடு இருந்து இந்த தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டிருக்க வேண்டும் என்ற ஐயப்பாடு பல்வேறு நாட்டு உளவு அமைப்புகளுக்கும் இருந்தது. இப்போது இந்த வீடியோவின் மூலம், அது உறுதியாகியுள்ளதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications