சரணடைய வேண்டாம்...ரஷ்யா நிறுத்தாதவரை ஆயுதங்களை கீழே போடப்போவதில்லை - ஜெலன்ஸ்கி
ராணுவத்தை சரணடைய நான் கூறியதாக வெளியான தகவல் வதந்தி, நான் அவ்வாறு கூறவில்லை என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
கீவ்: ரஷ்யா தாக்குதலை நிறுத்தாதவரை நாங்கள் ஆயுதங்களை கீழே போடப்போவதில்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ராணுவத்தை சரணடைய நான் கூறியதாக வெளியான தகவல் வதந்தி, நான் அவ்வாறு கூறவில்லை என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரைத் தொடங்கியுள்ளது. வியாழக்கிழமையன்று வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்ய ராணுவம், அதன் பின்னர் பீரங்கி உள்ளிட்டவை பயன்படுத்தித் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. மூன்றாவது நாளாக போர் நீடிக்கிறது.
இதற்கு உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏற்கனவே, பிரிட்டன், அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை அறிவிக்கத் தொடங்கி உள்ளன. அதேபோல ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சரின் சொத்துகளை முடக்க ஒப்புதல் அளித்திருந்தது.
நேற்றைய தினம் ஸ்னேக் தீவு அருகே போர்க்கப்பலில் இருந்த ரஷ்ய வீரர்கள் உக்ரைன் வீரர்களை சரணடையும் படி வற்புறுத்தினர். சரணடைய முடியாது என உக்ரைன் வீரர்கள் மறுத்ததால் 13 பேரும் கொல்லப்பட்டனர். வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
தனித்து விடப்பட்ட உக்ரைன்.. ராணுவத்தை அனுப்பாமல்.. டாலர்களில் உதவிக்கரம் நீட்டிய அமெரிக்கா!
3வது நாளாக நீடிக்கும் போர்
உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. மூன்றாவது நாளாக போர் நீடிக்கும் நிலையில், உக்ரைன் நாட்டிற்கு அண்டை நாடுகளில் ஒன்றான ஸ்வீடன் ராணுவ மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உதவிகளை அளித்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
அமைதி பேச்சுவார்த்தை
ரஷ்ய படைகள் தொடர்ந்து, தலைநகர் கீவ் நோக்கி முன்னேறி வருகின்றன. அந்த நகரின் பல பகுதிகளில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டு வருகின்றன. இதனிடையே போர் நிறுத்தம் மற்றும் அமைதி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
உக்ரைன் அறிவிப்பு
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் செய்தித்தொடர்பாளர் , போர் நிறுத்தம், அமைதி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாராக உள்ளது. பேச்சுவார்த்தையை எங்கு, எப்போது நடத்துவது என்பது குறித்து உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களை கீழே போட போவதில்லை
இதனிடையே ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள அதிபர் ஜெலன்ஸ்கி, நான் உக்ரைன் ராணுவத்தை சரணடைய சொல்லிவிட்டதாக சில வதந்திகள் கிளப்பப்பட்டிருக்கிறது. நாங்கள் எங்கள் ஆயுதங்களை கீழே போட போவதில்லை என்று கூறியுள்ளார். இது எங்கள் நாடு ஒருபோதும் எங்கள் நாட்டை விட்டுக் கொடுக்க போவதில்லை என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.