எபோலா நோய் கண்டு அஞ்சி ‘மனநோய்’க்கு ஆளாக வேண்டாம்... அமெரிக்க மக்களுக்கு ஒபாமா அறிவுரை
வாஷிங்டன்: உலகை அச்சுறுத்தி வரும் எபோலா வைரஸ் நோய் குறித்து யாரும் மனநோய்க்கு ஆளாக தேவையில்லை, அச்சம் அடையவும் வேண்டாம் என மக்களுக்கு அறிவுரைக் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நோய்க்கு இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், எபோலா நோய்க்கு எதிராக சர்வதேச சுகாதார அவசர நிலையை அது பிரகடனப் படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்நோயின் தாக்கம் தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. அமெரிக்காவில் ஏற்கனவே, 3 பேரை இந்த நோய் தாக்கி உள்ளது. மேலும், நோய்த் தொற்று அறிகுறிகளுடன் ஏறத்தாழ 100 பேர் சந்தேகத்தின் கண்காணிக்கப் பட்டு வருகின்றனர்.
இந்த நோயை ஒபாமா நிர்வாகம், கையாண்டு வரும் விதம் அங்கு பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.மேலும், இந்நோய் தங்கள் நாட்டிற்குள் பரவாமலிருக்க மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவோருக்கு தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க எம்.பி.க்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் அந்நாட்டு அதிபர் ஒபாமா. அப்போது அவர் எபோலா குறித்துக் கூறுகையில், ‘மேற்கு ஆப்பிரிக்க மக்களின் அமெரிக்க பயணத்துக்கு தடை விதிக்கும் யோசனையை ஏற்பதற்கில்லை. இப்படி உலகின் ஒரு மொத்த பகுதிக்கே சீல் வைக்க முற்படுவது, நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும். எபோலா வைரஸ் நோய் கண்டு யாரும் மனநோயுக்கு ஆளாகவும் தேவையில்லை. அச்சம் அடையவும் வேண்டாம்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.