மே 28ம் தேதியே பாக்தாதியை கொன்று விட்டோம் - ரஷ்யா பரபர தகவல்
மாஸ்கோ: ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு பக்கீர் அல் பாக்தாதியை கொன்று விட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மே 28ம்தேதி நடத்திய தாக்குதலில் பாக்தாதி கொல்லப்பட்டதாகவும் அது கூறியுள்ளது.
அவருடன் சேர்த்து 330க்கும் மேற்பட்ட முக்கியத் தீவிரவாதிகளையும் கொன்று விட்டோம் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
பாக்தாதி சில காலமாக வெளியில் நடமாடவில்லை. அவரது பேச்சுக்கள் அடங்கிய ஆடியோ டேப் மட்டுமே வெளியாகி வந்தது. இந்த நிலையில்தான் ரஷ்யாவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிரியாவில் நடத்திய விமானத் தாக்குதலின்போது பாக்தாதி கொல்லப்பட்டதாக ரஷ்யா கூறுகிறது. இருப்பினும் தனது வாதத்திற்கு வலு சேர்க்கும் ஆதாரத்தை அது வெளியிடவில்லை.
ரக்கா பகுதியில் உள்ள மறைவிடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அப்போது அங்கு பாக்தாதி இருந்ததாகவும் ரஷ்யா கூறுகிறது.
பாக்தாதி மரணம் குறித்து தகவல்கள வெளியாவது புதிதல்ல. பலமுறை இதுதொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் எல்லாமே பொய்த்துப் போயுள்ளன. ரஷ்யா சொல்வது உண்மையா அல்லது இதுவும் வதந்தியா என்று தெரியவில்லை.
இருப்பினும் ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் இந்த மரணச் செய்தியை அறுதியிட்டு கூறியுள்ளது. ரக்காவில் நடந்த விமானத் தாக்குதல் சமயத்தில் அங்கு பாக்தாதியும், 30 ஐஎஸ் தளபதிகளும், 300 வீரர்களும் இருந்ததாகவும், யாரும் உயிர் தப்பவில்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
பாக்தாதி கடைசியாக 2014ம் ஆண்டு ஜூன் மாதம்தான் வெளியுலகில் நடமாடினார். மொசூலில் உள்ள மசூதியில் அவர் பேசிய வீடியோ வெளியாகியிருந்தது. அதன் பின்னர் அவரை எங்குமே காணவில்லை.