அமெரிக்க ராணுவம் மீதான தாக்குதலை மன்னிக்க மாட்டோம், வேட்டையாடுவோம்: ஜோ பிடன் கடும் எச்சரிக்கை
"இந்த தாக்குதலை நடத்தியவர்களை, நாங்கள் மன்னிக்க மாட்டோம், நாங்கள் மறக்க மாட்டோம், நாங்கள் உங்களை வேட்டையாடி விலை கொடுக்க வைப்போம்" என்று காபூல் தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை பிறப்பித்துள்ளார்.
Recommended Video
காபூலின் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். குறைந்தது 60 ஆப்கானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காபூல் விமான நிலையம் அருகே மற்றும் அருகே உள்ள ஹோட்டலில் அடுத்தடுத்து 2 குண்டுவெடிப்புகள் நேற்றிரவு நடைபெற்றன. அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 13 பேர், கடல் படை மருத்துவர் ஒருவர் , மற்றும் 60 பொதுமக்கள், இந்த தாக்குதலில், கொல்லப்பட்டுள்ளனர்.120க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு
இஸ்லாமிய அரசின் துணை அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்-கே-யைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இருக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

ஜோ பிடன் ஆலோசனை
இதனிடையே, தாக்குதல் நடைபெற்றதும், தேசிய பாதுகாப்பு குழுவினருடன் ஜோ பிடன் ஆலோசனை நடத்தினார். பிறகு, அவர் அளித்த பேட்டியில்,
"இந்த தாக்குதலை நடத்தியவர்களுக்கும், அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிப்போர் யார் என்றும் தெரியும் - நாங்கள் மன்னிக்க மாட்டோம், நாங்கள் மறக்க மாட்டோம், நாங்கள் உங்களை வேட்டையாடி உரிய விலை கொடுக்க வைப்போம்" என்று பிடன் எச்சரித்தார்.

எச்சரிக்கை
ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று தாலிபான்கள் கெடு விதித்துள்ளனர். எனவே மேலும் பல தாக்குதல்களை எதிர்பார்ப்பதாக அமெரிக்க மத்திய கமாண்ட் தலைவர், ஜெனரல் கென்னத் மெக்கென்சி கூறியுள்ளார். விரும்புவோர் நாட்டை விட்டு வெளியேற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.

மீட்பு நடவடிக்கை தொடரும்
ஜோ பிடன் தனது பேட்டியின்போது, "ஆப்கனில் இருக்கும் அமெரிக்கர்களை நாங்கள் காப்பாற்றுவோம். நாங்கள் எங்கள் ஆப்கானிய கூட்டாளிகளையும் வெளியேற்றுவோம். பின் வாங்கப்போவதில்லை" என்று தெரிவித்தார்.

கூட்டம் கூட வேண்டாம்
தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி, அமெரிக்காவும் பிற நாடுகளும் தங்கள் குடிமக்களை விமான நிலையத்திற்கு அருகில் கூட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த வாரத்தின் தொடக்கத்தில், அமெரிக்க நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ய ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பு திட்டமிடும் என்று, பிடன் எச்சரித்திருந்தார். இந்த நிலையில்தான் இந்த குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன.

அமெரிக்கா திட்டம்
ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அனைத்து அமெரிக்கப் படைகளையும் திரும்பப் பெறத் திட்டமிட்டிருப்பதாக பிடென் முன்பு கூறியிருந்தார், ஆனால் தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றியுள்ளதால், நாட்டை விட்டு வெளியேற விரும்பும் அமெரிக்க குடிமக்களை வெளியேற்றுவதற்கு தேவைப்பட்டால் தொடர்ந்து அங்கே முகாமிட்டு இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில்தான் தாக்குதல் நடைபெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications