தாண்டவம் ஆடும் வைரஸ் பாதிப்பு.. கொரோனா என்ற வார்த்தையை கூட உச்சரிக்காத ஜி ஜின்பிங்! கோபத்தில் மக்கள்
பெய்ஜிங்: சீனாவில் இப்போது கொரோனா உச்சம் தொட்டுள்ள நிலையில், சமீபத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஜி ஜின்பிங் தனது உரையில் ஒரு முறை கூட கொரோனா வைரஸ் என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்தவில்லை. நிலைமை எதோ கட்டுக்குள் இருப்பதைப் போலவே பேசியிருந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சீனாவில் இப்போது கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது அனைவருக்கும் தெரியும். அங்கிருந்த ஜீரோ கோவிட் கட்டுப்பாடுகள் மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி, ஒரேயடியாக நீக்கியதே வைரஸ் பாதிப்பு இந்தளவு அதிகரிக்கக் காரணம் எனச் சொல்லப்பட்டது.
அங்கு சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீடியோக்களில் நிலைமை எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதை நாம் பார்க்க முடியும். மருத்துவமனைகள் அனைத்துமே தீவிர கொரோனா நோயாளிகளில் நிரம்பியுள்ளன.
ஆசை ஆசையா போனாரே.. சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற.. புதுக்கோட்டை மாணவரை பலி வாங்கிய கொரோனா?
சீனா
இருந்த போதிலும், சீனா தனது கொரோனா சூழல் கட்டுக்கடங்காமல் போனதை இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை. கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் இருந்து வருவது போன்ற இமேஜையே சீனா உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்த முயல்கிறது. இதனிடையே சமீபத்தில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது கொரோனா கட்டுப்பாட்டுக் கொள்கை அறிவியல் பூர்வமானது என்றும் மிகச் சிறப்பான ஒன்று என்றும் தெரிவித்தார். இருப்பினும், ஜீரோ வைரஸ் பாலிசியை உடனடியாக நீக்கியது குறித்தும் நிலைமை சமாளிக்கத் தயார் நிலையில் இருக்காதது குறித்தும் ஜி ஜின்பிங் எதுவும் பேசவில்லை.
ஜி ஜின்பிங்
அறிவியல் அடிப்படையில் எங்கு வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளது என்பதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ஜி ஜின்பிங் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "அறிவியல் அடிப்படையிலான சோதனை மூலம் நாங்கள் முடிந்தவரை மக்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துள்ளோம். சூழலுக்கு ஏற்பட நடவடிக்கை எடுத்துள்ளோம். அதிகாரிகள், குறிப்பாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தைரியத்துடன் கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்கப் போராடினார்கள். கடின முயற்சிகளால், முன்னெப்போதும் இல்லாத சிரமங்கள் மற்றும் சவால்களை நாங்கள் வென்றுள்ளோம்.. இது யாருக்கும் எளிதான ஒன்றாக இருக்கவில்லை" என்றார்.
கட்டுப்பாடுகள்
ஜீரோ கோவிட் பாலிசி உடனடியாக நீக்கப்பட்டதால் இப்போது அங்கு கொரோனா உச்சம் தொட்டுள்ளது. டெஸ்டிங், லாக்டவுன், பயண கட்டுப்பாடுகள் என அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பியுள்ளனர். இருப்பினும், இது குறித்தும் ஜி ஜின்பிங் எதுவும் பேசவில்லை. மாறாகச் சீனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் புதிய அத்தியாயத்தில் நுழைந்துள்ளதாக மட்டுமே அவர் தெரிவித்தார். அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதன் மூலம் இந்த துயரத்தை வென்று காட்டுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
வாயே திறக்கல
கொரோனா தொடர்பான மரணம் உட்பட, அவர் தனது உரையில் ஒருமுறை கூட கொரோனா வைரஸ் என்ற வார்த்தையைக் கூட குறிப்பிடவில்லை. பூகம்பம், வெள்ளம், வறட்சி, காட்டுத்தீ உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளைச் சீனா எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும், சில மோசமான விபத்துகளையும் எதிர்கொள்ள நேர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார். கடந்தாண்டு அவர் மூன்றாவது முறையாகத் தொடர்ந்து அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதன் பிறகு முக்கிய மாகாணங்களுக்கு நேரடியாகச் சுற்றுப்பயணம் செய்தது குறித்தும் ஜி ஜின்பிங் நினைவு கூர்ந்தார்.
மக்கள் போகம்
அதேநேரம் சீனா அரசுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடுமையான போராட்டம் நடைபெற்றது. அது குறித்தும் அவர் வாய் திறக்கவில்லை.. ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தை மூலம் ஒருமித்த கருத்துகளை ஏற்படுத்துவது முக்கியம் என்று மட்டும் அவர் தெரிவித்தார். சீனாவில் கொரோனா பாதிப்பு தாண்டவம் ஆடும் நிலையில், இது குறித்து ஜி ஜின்பிங் வாய் திறக்காதது சீன மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் விவகாரம்
தொடர்ந்து சீன இளைஞர்கள் மற்றும் தைவான் விவகாரம் குறித்துப் பேசிய அவர், "ஒரு நாட்டின் இளைஞர்கள் சிறப்பாக இருந்தால் மட்டுமே அந்த நாடு செழிக்கும்.. சீனா மேலும் வளர்ச்சியடைய, நமது இளைஞர்கள் முன்னோக்கி நகர வேண்டும். புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டும். தைவானில் உள்ள மக்களும் நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். இரு தரப்பு மக்களும் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்ற வேண்டும். அப்போது தான் சீனாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நம்மால் உறுதி செய்ய முடியும்" என்றும் அவர் தெரிவித்தார்.