ஈரான் குடியரசு நாடாக மாறியது எப்படி? காரணமே இந்த உத்தர பிரதேச தாத்தா தான் தெரியுமா? சுவாரசிய உண்மை
டெஹ்ரான்: இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இருநாடுகளும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. ஒருபுறம் இஸ்ரேலின் தாக்குதல், மறுபுறம் அமெரிக்காவின் மிரட்டல் என இரண்டையும் ஒருசேர சமாளித்து வருகிறார் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி. இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் அவரை கொல்லலாம் என்பதால் தற்போது அயதுல்லா அலி கமேனி பாதாள அறையில் குடும்பத்துடன் பதுங்கி உள்ளார். ஆனாலும் கூட இஸ்ரேல், அமெரிக்காவிடம் அடிபணியமாட்டேன் என்று தொடர்ந்து அடம்பிடித்து வரும் அயதுல்லா அலி கமேனி.
இப்படி ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உயிர் ஊசலாடி வரும் நிலையில் தான் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஈரானில் மன்னராட்சி ஒழிந்து ஈரான் இசுலாமிக் குடியரசு நாடாக மாற காரணமே உத்தரபிரதேசத்தில் இருந்து அங்கு சென்ற தாத்தா தான் தெரியுமா?. ஆம், நீங்கள் படித்தது சரிதான்.

இந்தியாவுக்கும், ஈரானுக்கும் இடையே நல்ல உறவு இருப்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் ஈரான் சுதந்திர நாடாக மாறியதற்கு உத்தர பிரதேசத்தில் பிறந்த நபர் தான் காரணமானது பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது. அதுபற்றி இங்கு பார்க்கலாம்.
ஈரான்.. நாம் அனைவரும் ஈரானை இப்படித்தான் அழைக்கிறோம். ஆனால் ஈரானில் தற்போது வசிக்கும் மக்கள் தங்கள் நாட்டை ஈரான் இசுலாமியக் குடியரசு என்று சொல்கின்றனர். இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது முன்காலத்தில் உலகம் முழுவதும் மன்னராட்சி தான் நடந்து வந்தது. இன்னும் கூட சில இடங்களில் மன்னராட்சி இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான இடங்களில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி வந்துவிட்டது. இதற்கு ஈரானும் விதிவிலக்கல்ல.
கடந்த 1979ம் ஆண்டு வரை ஈரானில் மன்னராட்சி தான் நடந்து வந்தது. அப்போது ஈரானை ஆட்சி செய்தவர் முகமது ரிசா பலவீ. இவர் வெளிநாட்டு தலைவர்களின் கைப்பாவையாக இருந்ததார். குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் தலைவர்களின் பேச்சை கேட்டு செயல்பட்டு வந்தார். இது ஈரானில் இருந்த பலருக்கும் பிடிக்கவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக ஈரானில் புரட்சி வெடித்தது.
இந்த புரட்சி 1979ம் ஆண்டில் வெடித்தது. ஈரானில் இடதுசாரி அமைப்புகளும், இசுலாமிய அமைப்புகளும், ஈரானிய மாணவர் இயக்கமும் புரட்சியில் ஈடுபட்டன. இந்த புரட்சிக்கு தலைமை தாங்கியவரின் பெயர் அயதுல்லா ருஹோல்லா கொமேனி (Ayatollah Ruhollah Khomeini). இந்த புரட்சி வெற்றியும் பெற்றது. மன்னராக இருந்த முகமது ரிசா பலவீ வீழ்த்தப்பட்டார். ஈரானில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த புரட்சியை முன்னின்று நடத்திய அயதுல்லா ருஹோல்லா கொமேனி ஈரானின் உச்சபட்ச தலைவர் ஆனார். அப்போது தான் ஈரானை, அந்த நாட்டு மக்கள் ‛ஈரான் இசுலாமியக் குடியரசு' என்று அழைக்க தொடங்கினர். அதாவது மன்னராட்சியில் இருந்து விடுபட்ட ஈரான் குடியரசு நாடாக செயல்பட தொடங்கியது. அதோடு அயதுல்லா ருஹோல்லாகெமேனி தான் நவீன ஈரானின் சிற்பி என்று அழைக்கப்பட்டார். இதனால் தான் ஈரானில் எங்கு சென்றாலும் அயதுல்லா ருஹோல்லா கொமோனியின் போட்டோக்கள் இருக்கும். ரூபாய் நோட்டு, பள்ளி வகுப்பறை, அரசு கட்டடங்கள் என திரும்பும் திசையெங்கும் அயதுல்லா ருஹோல்லா கொமோனியின் போட்டோ இடம்பெற்றுள்ளது. இவர் ஷியா (முஸ்லிம்களில் ஒரு பிரிவு) நம்பிக்கையில் உறுதி கொண்டவர். இதனால் ஈரானை ஷியா இஸ்லாமியர்களின் நாடாக வளர்த்தார்.
சரி இனி சொல்ல வந்த மேட்டருக்கு வருவோம். அதாவது 1979 ல் ஈரானில் புரட்சியை முன்நின்று நடத்தி அந்த நாட்டின் உச்சபட்ச தலைவரான இந்த அயதுல்லா ருஹோல்லா கொமேனியின் தாத்தா பெயர் சையத் அகமது முசாவி இந்தி. இவர் உத்தர பிரதேசத்தில் பிறந்தவர். உத்தர பிரதேசத்தில் உள்ள பரபங்கி அருகே கிண்டூர் கிராமத்தில் பிறந்தவர். இவரும் இஸ்லாமிய மதத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவர். 1830ம் ஆண்டில் உத்தர பிரதசத்தில் இருந்து வெளியேறினார். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் முகலாய பேரரசர்களின் வீழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. மேலும் இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்களின் ஆதிக்கம் வளர்ந்து கொண்டிருந்தது.
அப்போது இஸ்லாம் மதத்துக்கு மறுமலர்ச்சி தேவை. இஸ்லாம் மதத்தை மீட்டெடுக்க வேண்டும். இஸ்லாமியர்கள் ஆளும் நிலப்பகுதியை அதிகரிக்க வேண்டும் என்று அவர் எண்ணினார் சையத்அகமது முசாவி இந்தி. இதையடுத்து ‛பெர்சியா' (ஈரான் முதலில் இந்த பெயரில் தான் அழைக்கப்பட்டது) என்று அழைக்கப்பட்ட ஈரானுக்கு சென்றார். 1830ல் நஜாப்பில் உள்ள அலியின் கல்லறையைப் பார்வையிட்டார். 1834ல், அவர் ஈரானில் கோமெய்னுக்கு குடிபெயர்ந்தார். அங்கு ஒரு வீட்டை வாங்கி குடும்ப வாழ்க்கையை தொடங்கினார். இஸ்லாம் மதத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்டவர் என்பதால் அதனை பரப்புவதில் ஆர்வம் காட்டினார்.
3 திருமணங்கள் செய்தார். 5 குழந்தைகளை பெற்றார். அவர்களில் ஒருவர் தான் முஸ்தபா. இந்த முஸ்தபா கடந்த 1902ல் பிறந்தார். இந்த முஸ்தபாவின் மகன் தான் அயதுல்லா ருஹோல்லா கோமெய்னி. அதாவது ஈரானில் மன்னராட்சிக்கு எதிராக புரட்சி செய்து ஈரானை இசுலாமிக் குடியரசு என அறிவித்து அதன் முதல் உச்சபட்ச தலைவராக பொறுப்பு வகித்தவர். உத்தர பிரதேசத்தில் பிறந்து ஈரானுக்கு சையத் அகமது முசாவி இந்தி செல்லாமல் இருந்திருந்தால் ஈரானுக்கு நவீன சிற்பியான ஈரான் இசுலாமிக் குடியரசின் முதல் உயர்மட்ட தலைவரான அயதுல்லா ருஹோல்லா கொமேனி கிடைத்திருக்கமாட்டார் என்பது இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும்.
முன்னதாக உத்தர பிரதேசத்தில் பிறந்த சையத் அகமது முசாவி இந்தி கடந்த 1869 வரை வாழ்ந்தார். இந்தியாவுடனான தனது தொடர்பை நினைவுப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் தனது பெயருடன் இந்தி என்ற வார்த்தையை சேர்த்து வைத்திருந்தார். மேலும் சையத் அகமது முசாவி இந்தியின் பேரனான அயதுல்லா ருஹோல்லா கேமெய்னி கடந்த 1989 ல் மறைந்தார். இதையடுத்து தான் அயதுல்லா அலி கமேனி ஈரானின் உச்சபட்ச தலைவர் பொறுப்புக்கு வந்தார். 1989 முதல் இந்த பொறுப்பில் வகித்து வரும் அயதுல்லா அலி கமேனியின் உயிருக்கு இஸ்ரேல் குறிவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications