"பெய்ரூட்டின் பேய்.." 40 வருட நிழல் யுத்தம்.. இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையே உள்ள ரத்த வரலாறு! மிரட்டுதே
டெல் அவிவ்: லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று நடந்த வான்வழித் தாக்குதலில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஆனால், இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் இப்போது தொடங்கியது இல்லை. 40 ஆண்டுகளுக்கு மேல் தொடரும் இந்த நிழல் யுத்தம் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேலின் தாக்குதல் இரு நாடுகளைத் தவிரச் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்த மோதல் ஏதோ இப்போது சில ஆண்டுகளாக மட்டும் நடப்பது இல்லை.

ஹிஸ்புல்லா: இஸ்ரேல் உளவு அமைப்பிற்கும் ஹிஸ்புல்லாவிற்கும் இடையே கடந்த 40 ஆண்டுகளாக நடக்கும் நிழல் யுத்தத்தின் நீட்சி தான் இது. 1980களின் தொடக்கத்தில் பாலஸ்தீனிய விடுதலை அமைப்பை வேரோடு பிடுங்கி எறிய இஸ்ரேல் திட்டமிட்டது. லெபனானில் உள்ள பாலஸ்தீனிய படைகளை அழிக்கத் திட்டமிட்ட இஸ்ரேல், அவர்கள் மீது படையெடுத்தது.
இதில் தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு சில வெற்றிகள் கிடைத்தாலும், அதன் பிறகு நடந்த சில சம்பவங்கள் மிக மோசமாகப் பாதித்தது. அதாவது முதலில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்த பாலஸ்தீன ஆதரவாளர்களை இஸ்ரேல் வெற்றிகரமாக வெளியேற்றியது.
உள்ளே வரும் அமெரிக்கா! மத்திய கிழக்கில் ராணுவம் குவிப்பு! தனது குடிமக்களுக்கு மட்டும் தனியாக வார்னிங்
பின்னடைவு: இருப்பினும், 1982 நவம்பர் மாதம் இஸ்ரேலின் உளவு படை தலைமையிடமான ஷின் பெட் என்ற இடத்தில் ஹிஸ்புல்லா குண்டுவெடிப்பை நிகழ்த்தியது. இதில் இஸ்ரேலைச் சேர்ந்த 91 பேர் கொல்லப்பட்டனர். அங்குள்ள ஷியா பிரிவினர் நடத்திய முதல் தற்கொலைப் படை கார் குண்டுவெடிப்பாக இது பார்க்கப்படுகிறது. பின்னர் அவர்கள் எல்லாம் இணைந்து தான் ஹிஸ்புல்லா அமைப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் ஆதரவுடன் 1983இல் ஹிஸ்புல்லா அமைப்பு நிறுவப்பட்டது. ஹிஸ்புல்லா அமைப்பிற்கு இருந்த ஆதரவும் அவர்களின் திறனும் இஸ்ரேலுக்குத் தலைவலியாக மாறியது. குறுகிய காலத்தில் இஸ்ரேலுக்குத் தலைவலியைத் தரும் எதிரியாக ஹிஸ்புல்லா மாறியது.
கொரில்லா போர் யுக்திகள் மற்றும் ரகசிய நடவடிக்கைகளில் கை தேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர், லெபனானுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள இஸ்ரேல் இலக்குகளைச் சீர்குலைத்தனர். 1990கள் வரை பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க மற்றும் பிரான்ஸ் ராணுவ முகாம் உட்பட பல தாக்குதல்களை ஹிஸ்புல்லா நடத்தியது.
உலக நாடுகள் ஆதரவு: ஹிஸ்புல்லாவுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் நிதி ஆதரவு கிடைத்தது. இதன் காரணமாகவே ஹிஸ்புல்லா அமைப்பால் இந்த நிழல் போரைப் பல ஆண்டுகள் நடத்த முயன்றது. ஹிஸ்புல்லா அமைப்பு போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு நிதியைத் திரட்டியதாகவும் புகார்கள் உள்ளன.
1990களின் தொடக்கத்தில் அப்போதைய ஹிஸ்புல்லா தலைவர் அப்பாஸ் அல்- முசாவியை இஸ்ரேல் படைகள் கொன்றது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் தூதரகம் மற்றும் அர்ஜென்டினாவின் புவெனஸ் அயர்ஸில் உள்ள யூத மையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் பிறகே ஹிஸ்புல்லா சர்வதேச அளவில் கவனிக்கப்படும் அமைப்பாக மாறியது.
மொசாட்: மறுபுறம் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டும் ஹிஸ்புல்லா அமைப்பை காலி செய்யத் தீவிரமாக முயன்றது. மூத்த ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் செயற்பாட்டாளர்களைக் குறிவைத்துப் பல படுகொலைகளை மொசாட் நடத்தியது.
பெய்ரூட்டின் பேய்: குறிப்பாக ஹிஸ்புல்லாவுக்கு பல தாக்குதல்கள் திட்டங்களைத் தீட்டித் தந்த இமாத் முக்னியே பல ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்து வந்தார். இவரை பெய்ரூட்டின் பேய் என்று கூட அழைப்பார்கள். அந்தளவுக்கு பக்காவாக ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்துவிட்டுத் தலைமறைவாகிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அவரை கடந்த 2008இல் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து கார் வெடிகுண்டு மூலம் கொன்றது. இதனால் கடும் கோபமடைந்த ஹிஸ்புல்லா பல வழிகளில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது.
இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் என்பது இதுபோன்ற தாக்குதலுடன் மட்டும் நின்றுவிடவில்லை. கடந்த 2010இல் ஈரானின் அணுஆயுத நிலையங்களைச் சீர்குலைக்கும் ஆப்ரேஷனை இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து நடத்தியது. இது ஈரானின் அணுசக்தி மையத்தை முடக்கியது. இதுபோன்ற தேசத்தை ஏற்படுத்திய முதல் சைபர் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இதன் நீட்சியாகவே இப்போது பேஜர் மற்றும் வாக்கி டாக்கி தாக்குதல் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications