"அப்பாடா.. அவருக்கு எதுவும் ஆகல.. அதுவே போதும்.." இம்ரான் கானை நினைத்து பெருமூச்சுவிடும் முதல் மனைவி
இஸ்லாமாபாத்: இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு உள்ள நிலையில், இது தொடர்பாக அவரது முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தற்போதுள்ள அந்நாட்டு அரசுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மக்கள் விரோத ஆட்சி நடப்பதால் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
இதற்காக அவர் நாடு முழுக்க தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகிறார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்த உள்ளதாக அவர் அறிவித்தார்.
சதி..‛‛என்னை கொல்ல முயன்ற 3 பேர்’’.. யார் தெரியுமா? குண்டு பாய்ந்து உயிர் தப்பிய இம்ரான் கான் பகீர்
பாகிஸ்தான்
பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2022 வரை அந்நாட்டின் பிரதமர் பதவியில் இருந்தார். முதலில் சில மாதங்கள் கூட்டணியில் சிக்கல் இல்லை என்ற போதிலும், இந்தாண்டு தொடக்கத்தில் திடீரென எதிர்ப்பு கிளம்பியது. கூட்டணிக் கட்சிகளே ஆதரவை விலக்கிக் கொண்ட நிலையில், இம்ரான் கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.
துப்பாக்கிச் சூடு
அவருக்குப் பதிலாக ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்குப் பின்னால் வெளிநாட்டினரின் சதி உள்ளதாக இம்ரான் கான் தொடர்ந்து கூறி வருகிறார். ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக அவர் தொடர்ந்து பிரசாரம் செய்து வரும் நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று அவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது.
காயம்
இதில் அவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும், நல்வாய்ப்பாக அவரது உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. இம்ரான் கான் மீது நடந்துள்ள இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம், உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இம்ரான் கானின் முன்னாள் மனைவியும் தயாரிப்பாளருமான ஜெமிமா கோல்ட்ஸ்மித் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சில பரபர தகவல்களைத் தெரிவித்து உள்ளார்.
நிம்மதி
கொலை முயற்சி தாக்குதலுக்குப் பின் இம்ரான் கான் பாதுகாப்பாக உள்ளார் என்ற செய்தி தனக்கு நிம்மதி தருவதாக ஜெமிமா கோல்ட்ஸ்மித் தெரிவித்தார். இது தொடர்பாகத் தனது ட்விட்டரில், "இந்த செய்தி அதிர்ச்சி தருகிறது... கடவுளுக்கு நன்றி.. அவர் நலமாக இருக்கிறார். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவரைப் பிடித்துத் தந்த வீரனுக்கு அவரது மகன்கள் நன்றி கூறிக் கொள்கின்றனர்" என்று ட்வீட் செய்துள்ளார்.
முதல் மனைவி
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் துணிச்சலுடன் பிடித்த இளைஞரை ஹீரோ எனக் குறிப்பிட்டு நன்றியும் தெரிவித்து உள்ளார். இம்ரான் கானின் முதல் மனைவியான பிரிட்டனைச் சேர்ந்த ஜெமிமா கோல்ட்ஸ்மித் ஒரு திரைக்கதை எழுத்தாளர். மேலும், அவர் பல படங்களையும் ஆவணப்படங்களையும் தயாரித்து உள்ளார். இவர் கடந்த 1995இல் இம்ரான் கானை திருமணம் செய்து கொண்டார்.
இரு மகன்கள்
இந்த தம்பதிக்கு சுலைமான் ஈசா மற்றும் காசிம் என இரு மகன்கள் உள்ளனர். இருப்பினும், இவர்களின் இல்லற வாழ்க்கை சில ஆண்டுகள் மட்டுமே நீடித்து. இந்த ஜோடி 2004இல் விவாகரத்து பெற்றது. இதையடுத்து அவரது மகன்கள் தாயிடமே பிரிட்டனில் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.