"சிக்கல் மேல் சிக்கல்!" பெரிய செக் வைக்கும் சர்வதேச நாணய நிதியம்! கையை பிசையும் பாக்! என்ன நடந்தது
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடு இப்போது இக்கட்டான ஒரு சூழலில் தள்ளப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகள் கற்பனையைத் தாண்டி உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு பின்னர் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் இக்கட்டான சூழலில் உள்ளது. இது இலங்கையில் அரசியல் குழப்பத்திற்கும் வித்திட்டது. ஆனால், அது இலங்கையுடன் நின்றுவிடவில்லை.
இப்போது பாகிஸ்தானிலும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்
நிலைமை கையை விட்டுப் போகாமல் இருக்க உலக நாடுகளிடம் பாகிஸ்தான் உதவி கேட்டுள்ளது. சர்வதேச நிதியத்திடம் பாகிஸ்தான் கடன் கேட்ட நிலையில், அதற்குச் சர்வதேச நிதியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. மின் கட்டணத்தை உயர்த்துதல், வரி வசூலை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவாயை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கட்டுப்பாடுகளை விதித்தன. இதன் எதிரொலியாக அங்கு பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
பாகிஸ்தான் பிரதமர்
இருப்பினும், சர்வதேச நாணய நிதியம் வேறு பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இவை அனைத்தையும் பூர்த்தி செய்தால் மட்டுமே உதவி செய்ய முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். சதுர்வேத நாணய நிதியத்தின் நிபந்தனைகள் கற்பனைக்கு அப்பாற்பட்டு உள்ளதாகத் தெரிவித்த அவர், இருப்பினும், வேறு வழியில்லை என்பதால் அதை ஒப்புக் கொண்டு தான் தீர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தயக்கம்
பாகிஸ்தானுக்குத் தேவையான நிதியை வழங்கும் முன்பு, சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு, கடைசி பேச்சுவார்த்தைக்காகச் சமீபத்தில் பாகிஸ்தான் சென்றது. சர்வதேச நாணய நிதியம் வரியை உயர்த்துவது, மானியக் குறைப்புக்கு நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லிக் கேட்கிறது. இருப்பினும், இந்தாண்டு அக். மாதம் அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், இப்போது தேர்தலை நடத்தினால் அது மக்களின் கோபத்தை ஆளும் ஷெரீப் அரசுக்கு எதிராகத் திருப்பும் என்பதால் அந்நாட்டு அரசு தயக்கம் காட்டி வருகிறது.
கற்பனை செய்ய முடியாத கட்டுப்பாடுகள்
இது குறித்து அந்நாட்டுப் பிரதமர் ஷெரீப் கூறுகையில், "என்னால் விரிவாகச் சொல்ல முடியாது. இருப்பினும், நமது நாட்டில் இப்போது கற்பனை செய்ய முடியாத அளவுக்குப் பொருளாதார சிக்கல் நிலவுகிறது என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும். சர்வதேச நாணய நிதியம் நமக்கு உதவக் கற்பனைக்கும் அப்பாற்பட்ட நிபந்தனைகளை விதித்து உள்ளனர். ஆனால், நமக்கு வேறு வழியில்லை. இதை நாம் ஏற்றுக்கொண்டு தான் தீர வேண்டும்" என்றார். பாகிஸ்தானில் ஒரு புறம் பொருளாதார குழப்பம் நிலவும் நிலையில், மறுபுறம் அரசியல் குழப்பமும் அங்கு உச்சத்தில் இருக்கிறது.
அந்நிய செலாவணி கையிருப்பு
அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மீண்டும் $3.1 பில்லியன் டாலராக குறைந்துள்ளதாகப் பாகிஸ்தான் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது அடுத்த மூன்று வாரங்களுக்கு மட்டுமே இறக்குமதி செய்ய போதுமானதாக இருக்கும். கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பாகிஸ்தானில் பணவீக்கம் உச்சத்தில் இருக்கிறது. இதனால் அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கூட வாங்க முடியாமல் அந்நாட்டு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அங்கு இப்படியொரு சிக்கலான நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் நட்பு நாடுகளும் அதற்கு உதவ ஆர்வம் காட்டவில்லை.
இக்கட்டான நிலை
பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பும் வரலாறு காணாத அளவுக்குச் சரிந்துள்ளது. இப்படி பொருளாதார சிக்கல் ஒரு பக்கம் இருக்க அரசியல் நெருக்கடியும் ஆளும் தரப்புக்கு அதிகரித்துள்ளது. அங்கு சில மாதங்களில் தேர்தல் நடக்கும் நிலையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மிகப் பெரியளவில் பேரணிகளை நடத்தி வருகிறார். இப்படி இரண்டு பக்கத்தில் இருந்தும் பிரச்சினைகள் உள்ளதால் பாகிஸ்தான் அரசு இக்கட்டான ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.