கொரோனா பூஸ்டர் டோஸ் போடுவதை செப்டம்பர் வரை நிறுத்துங்கள்.. பணக்கார நாடுகளுக்கு WHO வேண்டுகோள்!
ஜெனீவா: உலக நாடுகள் செப்டம்பர் மாதம் இறுதி வரை பூஸ்டர் டோஸ் செலுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் வலியுறுத்தி இருக்கிறார்.
2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இப்போது ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் பரவி விட்டது என்றே கூறலாம். வளர்ந்த நாடுகள், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் என அனைத்தையும் கொரோனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஆரம்பிச்சாச்சு.. 3 மணி நேரம்.. உங்க ஏரியாவில் எப்படி.. ட்வீட் போட்டு அமைச்சரை சீண்டிய கஸ்தூரி
முதலில் கொரோனா முதல் அலை வந்து பாடாய் படுத்தியது. அடுத்ததாக கொரோனா 2-வது அலை வந்து மிரட்டியது. இதனை தொடர்ந்து பல நாடுகளில் 3-வது அலை வந்து விட்டது. சில நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. நான்காவது அலையும் வந்து விடும் என்று கூறப்படுகிறது.
மிரட்டும் கொரோனா
இது தவிர கொரோனா வைரஸ் பல்வேறு கட்டங்களில் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. டெல்டா வைரஸ், டெல்டா பிளஸ், ஆல்பா என தொடர்ந்து உருமாறிக் கொண்டே மனித குலத்தை மிரட்டிக் கொண்டிருக்கிறது. இந்த வகையில் பார்த்தால் டெல்டா வைரஸ் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்புக்கு மூல காரணமாக இருந்துள்ளது. கொரோனா வைரஸ். மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், சுகாதார நடவடிக்கையை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கையை பின்பற்றுவதன் மூலம் கொரோனா நம்மை நெருங்க விடாமல் தடுக்கலாம்.
தடுப்பூசிகள் எனும் பேராயுதம்
ஆனால் கொரோனாவை நிரந்தரமாக முழுமையாக கட்டுப்படுத்தும் ஒரே பேராயுதம் தடுப்பூசிகள்தான். இதனால் பல்வேறு நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு தடுப்பூசியை செலுத்தும் பணியில் அதி தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. தங்கள் நாட்டு மக்களுக்கு விரைவாக தடுப்பூசி போட்டு வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. சில நாடுகள் ஒரு டோஸ் தடுப்பூசியை முழுவதுமாக போட்டுள்ளன. ஒரு சில நாடுகள் 2 டோஸ் தடுப்பூசியும் முழுமையாக போட்டுள்ளன.
பூஸ்டர் டோஸ்
ஒரு சில நாடுகள் முதல் டோஸ், இரண்டாவது டோஸ் முடிந்து பூஸ்டர் டோஸாக மூன்றாவது தடுப்பூசியையும் போட்டு வருகின்றன. இவ்வாறு வளர்ந்த, வளரும், பணக்கார நாடுகள் விரைவாக தடுப்பூசி போட்டு வரும் நிலையில் வறுமையில் உள்ள ஒரு சில நாடுகள் தங்கள் மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடுவதற்கே திண்டாடி வருகின்றன. இதனால் தடுப்பூசி போடுவதில் உலக நாடுகளுக்குள் ஒற்றுமில்லை, தடுப்பூசி போடுவதில் சமத்துவம் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
டெட்ரோஸ் அதானோம் வேண்டுகோள்
இந்த நிலையில் உலக நாடுகள் பூஸ்டர் டோஸ் போடும் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பூஸ்டர் டோஸ் என்பது இரண்டு டோஸ் முடிந்து மக்களுக்கு மூன்றாவது டோஸ் போடுவதாகும். ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவது, கொரோனாவை தடுப்பதில் பயன் தருமா என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று உலக சுகாதர அமைப்பு ஆணித்தரமாக கூறியுள்ளது.
செப்டம்பர் இறுதி வரை
உலக நாடுகள் பூஸ்டர் டோஸ் செலுத்துவதை நிறுத்தினால் ஒவ்வொரு நாட்டின் மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் பேர் தடுப்பூசி போடுவதற்கு அது உதவும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார். பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கிடையேயான டோஸ் விநியோகத்தில் கடுமையான சமத்துவமின்மையை நிவர்த்தி செய்ய குறைந்தபட்சம் செப்டம்பர் இறுதி வரை பூஸ்டர் டோஸ் செலுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
Recommended Video
அக்கறை புரிகிறது
''டெல்டா வகையிலிருந்து தங்கள் மக்களை பாதுகாக்க அனைத்து அரசாங்கங்களின் அக்கறையும் எனக்கு புரிகிறது. ஆனால் தடுப்பூசிகளின் உலகளாவிய விநியோகத்தை இன்னும் அதிகமாகப் பயன்படுத்திய நாடுகளை இதற்கு மேலும் பயன்படுத்துவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்'' என்று டெட்ரோஸ் அதானோம் நிருபர்களிடம் கூறியுள்ளார்.
வருமானம் குறைவாக உள்ள நாடுகள்
அதிக வருமானம் உள்ள நாடுகளுக்கு செல்லும் அதிகமான தடுப்பூசிகள் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். உலக வங்கியால் அதிக வருவாய் என வகைப்படுத்தப்பட்ட நாடுகளில் 100 பேருக்கு 101 டோஸ் செலுத்தப்பட்டது. அதே வேளையில் 29 குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 100 பேருக்கு 1.7 டோஸாக அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
ஒத்துழைப்பு தேவை
பூஸ்டர் டோஸ் போடும் திட்டத்தை தடை செய்ய எங்களுக்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. குறிப்பாக தடுப்பூசிகளின் உலகளாவிய விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் சில நாடுகள் மற்றும் நிறுவனங்கள் ஆதரவு இருந்தால் அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைக்கும் என்று டெட்ரோஸ் அதானோம் நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். குறைவான தடுப்பூசி கிடைக்கும் நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற ஐ.நா.வின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது குறைப்பிடத்தக்கது.