அசத்தும் தமிழ்நாடு.. கத்தார் உலக கோப்பை கால்பந்துக்கு 3 கோடி முட்டைகள் சப்ளை செய்யும் நாமக்கல்!
தோஹா: கத்தார் ஃபிபா கால்பந்து தொடருக்கும் நம்ம நாமக்கல் மாவட்டத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அது என்ன தொடர்பு தெரியுமா?.. மேற்கொண்டு படியுங்கள்!
2022 கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கின்றன. உலகமே இந்த கால்பந்து தொடரை உற்றுநோக்கி பார்த்துக்கொண்டு இருக்கிறது. கத்தாரில் நடக்கும் இந்த தொடர் பல்வேறு விஷயங்களுக்காக கவனம் பெற்றுள்ளது.
இதற்காக 220 பில்லியன் டாலரை கத்தார் செலவு செய்துள்ளது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1,79,97,11,10,00,000 ரூபாய். அதாவது 17 லட்சம் கோடி ரூபாய்.
உலகிலேயே இதுதான் அதிக செலவு செய்யப்பட்டு நடத்தப்படும் கால்பந்து உலகக் கோப்பை தொடர். சரியாக சொல்ல வேண்டும் என்றால் அதிக செலவில் நடத்தப்படும் விளையாட்டு தொடர்.
17 பேர்.. ரூ.23 லட்சம்.. உலககோப்பை கால்பந்து போட்டியை பார்த்தே ஆகணும்.. சேட்டன்கள் செய்த ‛சம்பவம்’
கத்தார்
கடந்த 5 -6 வருடங்களாக இந்த தொடருக்காக கத்தார் மொத்த நாட்டையே புரட்டி போட்டது. புதிய மைதானங்களை அமைத்தது. உலகத்தரமான ஏற்பாடுகளை செய்தது. கொரோனாவிற்கு இடையிலும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்தது. பிரம்மாண்ட அரங்குகள், உலகத்தரமான வசதிகள் என்று இந்த தொடருக்காக சிறப்பான ஏற்பாடுகளை கத்தார் செய்து உள்ளது. இந்த வருடம் 32 அணிகள் தொடரில் பங்கேற்கின்றன. அடுத்த 2026 தொடரில் 48 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கும். மொத்தம் 5 நகரங்களில் மாறி மாறி தொடர்கள் நடக்க உள்ளன.
கால்பந்து உலகக் கோப்பை
கத்தாரில் கடும் வெயில், வெப்பத்திற்கு இடையே நடக்கும் இந்த தொடர் அதிக கவனம் பெற்றுள்ளது. இன்னொரு பக்கம் கத்தார் பல்வேறு விஷயங்களுக்காக சர்ச்சையில் சிக்கி உள்ளது. வெளிநாட்டு ஊழியர்களை கொத்தடிமைகளாக நடத்தியது, கத்தாரில் இருக்கும் மனித உரிமை மீறல்கள், கத்தாரில் தற்போது வெளிநாட்டு வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு, மைதானத்திற்குள் பீர் பாட்டில் கொண்டு செல்ல தடை, LGBTQ பிரிவினருக்கு இருக்கும் தடை என்று கத்தார் விதிகள் வெளிநாட்டு வீரர், வீராங்கனை குழுக்களை கடுப்பிற்கு உள்ளாக்கி உள்ளது.
கத்தார் விதிகள்
இதன் காரணமாக கத்தார் கால்பந்து தொடரை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தொடரில் கலந்து கொள்ள கூடாது என்று பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இன்னொரு பக்கம் தொடர் இப்படித்தான் நடக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள். விதிகளில் தளர்வுகளை செய்ய மாட்டோம். இது எங்கள் நாட்டில் நடக்கிறது என்று கத்தார் அதிரடியாக அறிவித்துவிட்டது. இந்த நிலையில்தான் கத்தார் தொடரில் தமிழ்நாடு தொடர்பான முக்கியமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு
அதன்படி இந்த தொடரில் வீரர்களுக்கு 3 கோடிக்கும் அதிகமான முட்டைகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான முட்டைகள் எல்லாம் தமிழ்நாட்டில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. கத்தாரில் பொதுவாக நாமக்கல் முட்டைதான் விற்கப்படும். அங்கு மொத்தம் ஒன்றரை கோடி முட்டைகள் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும். இந்த முறை 3 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இந்த தொடர் காரணமாக அங்கே முட்டை தேவை அதிகரித்து உள்ளது.
நாமக்கல்
பொதுமக்களுக்கு பயன்படுத்த ஒரு கோடி முட்டை வரை தேவைப்படும். மீதம் உள்ள முட்டைகள் இந்த தொடருக்காக பயன்படுத்தப்படும். அதன்பாடு வீரர்களுக்கு தினசரி டயட்டில் கொடுக்க முட்டை பயன்படுத்தப்படும். அதன்பின் பார்வையாளர்கள் வாங்கும் உணவுகளில் முட்டை உள்ள உணவுகளை சமைக்க முட்டை பயன்படுத்தப்படும். முட்டையை வைத்து செய்யப்படும் மற்ற உணவுகளை தயாரிக்கவும் முட்டை பயன்படுத்தப்படும். இவை அனைத்திற்கும் தமிழ்நாட்டில் இருந்துதான் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்ய காரணம் இருக்கிறது.
முட்டைகள்
நாமக்கல் மாவட்டத்தில் முட்டைகள் அதிகம் உற்பத்தி ஆகிறது. இந்தியாவின் முட்டை தலைநகரமாக நாமக்கல் உள்ளது. அதேபோல் அங்கு முட்டைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. உலகிலேயே குறைந்த விலை முட்டை மார்க்கெட்டாக நாமக்கல் உள்ளது. இதனால் நேரடியாக கத்தார் உலகக் கோப்பை கால்பந்து கமிட்டி சார்பாக இங்கே முட்டை வாங்க டீலிங் செய்யப்பட்டு உள்ளது. மற்ற நாடுகளுக்கு கிடைக்க இந்த பெருமை தமிழ்நாட்டிற்கு கிடைத்து உள்ளது.