ஏமனில் தீவிரவாதிகள் வெறித்தனம்- பள்ளி பஸ் மீது கார் குண்டு மோதல் - 20 குழந்தைகள் உள்பட 31 பேர் பலி
சானா: பாகிஸ்தானில் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து தாலிபான் தீவிரவாதிகள் வெறித் தாக்குதல் நடத்தி 141 பேரைக் கொன்று குவித்த வடு கூட மறைவதற்குள் ஏமன் நாட்டில் ஒரு கார் குண்டு மூலம் தீவிரவாதிகள், பள்ளிக்கூட பேருந்தைத் தாக்கியுள்ளனர். இதில் 20 பள்ளிப் பிள்ளைகள் உள்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஏமனில் உள்ள ராடா என்ற நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அல் கொய்தா அமைப்பின் ஏமன் பிரிவு இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. அதேசமயம், பள்ளிப் பேருந்துக்கு தீவிரவாதிகள் குறி வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் உள்ள ஷியா பிரிவு தலைவர் ஒருவரது வீட்டைத்தான் தாக்க வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை அனுப்பியுள்ளனர் தீவிரவாதிகள்.

கார் அந்த வீட்டில் மோதவிருந்த சமயத்தில் அந்தப் பாதையில் பள்ளிப் பேருந்து குறுக்கிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதில் பஸ் முற்றிலும் எரிந்து சாம்பலாகிப் போனது. அதில் இருந்த 20 பள்ளிக் குழந்தைகள் உள்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹூதி என்ற ஷியா பிரிவு இயக்கத்தினருக்கும், அல் கொய்தாவினருக்கும் இடையே ராடா நகரில் கடந்த பல வாரங்களாக கடும் மோதல் நடந்து வருகிறது. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் இன்று பள்ளிக்கூட பஸ் சிக்கி பரிதாபமாக 31 பேரின் உயிர் பறிபோயுள்ளது.












Click it and Unblock the Notifications