இது ஏழைகளின் வீடா.. ஒப்பந்ததாரரை லெப்ட் ரைட் வாங்கிய ஆட்சியர்.. இரு அதிகாரிகள் சஸ்பெண்ட்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஊத்துக்காட்டில் தரமற்ற இருளர் குடியிருப்பு விவகாரத்தில் இரு அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காட்டில் சுமார் ரூ.3.5கோடி மதிப்பீட்டில் புதியதாக இருளர் பழங்குடியினருக்காக 76 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதை நேற்று முன் தினம் தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் , குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஆகியோர் ஆய்வு செய்ய வரவிருந்தனர்.
அவர்கள் வருவதற்கு முன்பு அக் குடியிருப்புகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த வீடுகள் ஒவ்வொன்றும் ரூ 4.62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது.
4 மாவட்டம்.. 150 கிமீ.. 6 நாட்கள்! ஹரியானாவில் காங்கிரஸ் மாஸ் பிளான்.. கைகொடுக்குமா ராகுல் யாத்திரை?
மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி
மாவட்ட ஆட்சியரின் இவ் ஆய்வின் போது இருளர் பழங்குடியினருக்காக குடியிருப்புகள் தரமற்ற வகையில் கட்டப்பட்டு வருவது தெரிய வந்ததை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். மாவட்ட ஆட்சியர் இது குறித்து விளக்கம் கேட்க இக்குடியிருப்புகளை கட்டும் ஒப்பந்ததாரர் பாபு என்பவரை அழைத்து அது குறித்து முறையிட்டு அவரை கடுமையாக கடிந்து கொண்டார்.
ஒப்பந்ததாரர் பாபு
ஒப்பந்ததாரர் பாபுவிடம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, உங்களை ஏற்கெனவே எச்சரித்துவிட்டுதானே சென்றோம். எப்போது முடிப்பீர்கள். என்னங்க செய்து வச்சிருக்கீங்க, இது ஏழைகளுக்கான வீடு! தொட்டாலே சிமெண்டெல்லாம் உதிர்கிறது. இப்படியா வீடு கட்டுவது, இந்த வீட்டின் மதிப்பு என்ன? (4 லட்சம் என ஒப்பந்ததாரர் சொல்கிறார்). 4.62 லட்ச ரூபாய்க்கான வீடா இது?
கான்ட்ராக்ட் ரத்து
இந்த மாதிரி செய்தீங்கன்னா, நான் கான்ட்ராக்ட்டை கேன்சல் செய்துவிடுவேன் பார்த்துகோங்க. விஜிலென்ஸில் பிடித்து கொடுத்துவிடுவேன் என எச்சரித்தார். மேலும் உடனிருந்த அதிகாரிகளையும் இதெல்லாம் செக் செய்ய மாட்டீங்களா ஒவ்வொரு வீட்டின் பின்னாலும் நாங்கள் ஓடி கொண்டே இருக்க வேண்டுமா என கடிந்து கொண்டார்.
ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை
மேலும் தரமற்ற வகையில் குடியிருப்புகளை கட்டும் இந்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து அவர் மீது நடவடிக்கை எடுத்து மாற்று ஒப்பந்ததாரர் மூலம் பணியை மேற்கொள்ளுங்கள் என மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஸ்ரீதேவியிடம் அறிவுறுத்தினார். ஸ்ரீதேவியும் தனக்கு கீழ் இருந்த அதிகாரிகளை யூஸ்லெஸ் என திட்டினார்.
இரு அதிகாரிகள் இடைநீக்கம்
இந்த நிலையில் 76 வீடுகளும் தரமற்ற முறையில் இருப்பதால் இந்த வீடு கட்டும் பணிக்கு பொறுப்பாளர்களான வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதா, கள ஆய்வாளர் சுந்தரவதனம் ஆகியோரை இடைநீக்கம் செய்து ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டார்.