தமிழ்நாடு நாள் உற்சாகக் கொண்டாட்டம்: காஞ்சியில் அண்ணா சிலைக்கு மரியாதை; மெரினாவில் மணற்சிற்பம்!
காஞ்சிபுரம் : தமிழ்நாடு நாள் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Recommended Video
மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டதை மாற்றி, மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவால் கடந்த 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி 'தமிழ்நாடு' என்று பெயரிடப்பட்டது. அந்த நாள் தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாடு நாள் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை
அதன் ஒருபகுதியாக, தமிழ்நாடு என பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் புகழை பறைசாற்றும் வகையில், அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள நினைவு இல்லத்தில், அண்ணாவின் திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அமைச்சர் தா.மோ.அன்பரசன், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி மற்றும் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மெரினா கடற்கரையில் மணல் சிற்பம்
இதனிடையே, தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப்படுவதையொடி, அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. அதன் ஒருபகுதியாக, சென்னை மெரினா கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மணல் சிற்பத்தை உருவாக்க 50 டன் மணல் மற்றும் 30 ஆயிரம் லிட்டர் நீர் பயன்படுத்தபட்டுள்ளது. பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த மணல் சிற்பத்தில், தமிழக அரசின் இலச்சினை, தலைமைச் செயலகம், பேரறிஞர் அண்ணாவின் உருவம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாடு என பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் புகழை போற்றும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த மணற் சிற்பத்தை, கடற்கரைக்கு வரும் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். மேலும், மணற் சிற்பங்களை தங்களது செல்ஃபோனில் புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.












Click it and Unblock the Notifications