கன்னியாகுமரியில் காதல் கல்யாணம்.. அக்காளின் கணவரை வெட்டிக் கொன்ற 15 வயது தம்பி.. காரணமே வேற!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே காதல் திருமணம் செய்த இளைஞரை, அவரது மனைவியின் 15 வயது தம்பியே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அதேநேரம் இந்த கொலைக்கான காரணம் காதல் அல்ல.. பிரச்சனையே வேறாக உள்ளது.. அதனை இப்போது பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாகோடு மாணிக்கவிளையை சேர்ந்தவர் விஜயகுமார் என்பவருடைய மகன் பிஜு என்ற விஜு . விஜூவிற்கு 22 வயது ஆகிறது. இவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் ம் அதே பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண்ணுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு இவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தை இருக்கிறது இவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் சென்று கொண்டிருந்தது. கூலி வேலை செய்து வந்த விஜூ திருமணத்திற்கு பின்னர் வீடு மற்றும் தோட்டங்களில் இருந்து பலாப்பழம் வாங்கி விற்பனை செய்து வந்தார்.
நன்றாக இருந்த குடும்ப வாழ்க்கையில் எமனாக வந்தது குடிப்பழக்கம். விஜுவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. திருமணத்திற்கு பிறகு மது அருந்துவது அதிகரித்துள்ளது. குடித்துவிட்டு வந்து மனைவியுன் தினமும் சண்டை போட தொடங்கினாராம் விஜூ.. இதனால் சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அப்படியே அழிய தொடங்கியது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை உருவானது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனைவி கோபித்துக் கொண்டு குழந்தையை தூக்கி கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனை கேள்விப்பட்ட விஜு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தனது அண்ணன் சிஜினுடன் மனைவியின் வீட்டு போயிருக்கிறார்.. அப்போது மனைவி தானும் மருத்துவமனைக்கு வருவதாக கூறினார். இதற்கு விஜு மறுத்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை உறவினர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளார்.
பின்னர் விஜு தனது அண்ணனுடன் குழந்தையை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து மருந்து வாங்கி விட்டு இருவரும் இரவு 10.45 மணிக்கு குழந்தையை மனைவியின் வீட்டில் கொண்டு விட சென்றார்கள். வீட்டில் குழந்தையை விட்ட நிலையில், அப்போது மனைவிக்கும் விஜுவுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை மனைவியின் 15 வயது தம்பி அங்கு நின்று பார்த்து கொண்டிருந்தான். திடீரென அந்த சிறுவன் வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்து விஜுவை பார்த்து 'நீ தினமும் மது குடித்துவிட்டு வந்து எனது அக்காளிடம் தகராறு செய்து அடித்துக் கொண்டிருக்கிறார். இனி நீ உயிரோடு இருக்கக் கூடாது' என்று கூறிக்கொண்டு அவரது தலையில் ஓங்கி வெட்டினார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த விஜுவை மீண்டும் சிறுவன் ஆவேசமாக வெட்டினான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சிறுவனை தடுத்து நிறுத்தியுள்ளார்கள்..
எனினும் இரண்டு முறை ஓங்கி வெட்டியதால் படுகாயமடைந்த விஜுவை அவரது அண்ணன் சிஜின் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி செய்துவிட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் விஜு பரிதாபமாக உயிரிழந்தார்..
இதுகுறித்து கொலை செய்யப்பட்ட விஜுவின் அண்ணன் சிஜின் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார், அக்காவின் கணவரை கொலை செய்த 15 வயது சிறுவன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். காதல் திருமணம் செய்த இளைஞரை மனைவியின் 15 வயது தம்பி வெட்டிக் கொலை செய்த சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications