மஞ்சள் நிறக்கார்..ரூ.1.10 கோடி மதிப்பு முந்திரியுடன் லாரி கடத்தல், ADMK மாஜி அமைச்சரின் மகன் கைது
ரூ.1.10 கோடி மதிப்புள்ள முந்திரி லோடுடன் லாரியை கடத்தியதாக அதிமுக அமைப்புச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லப்பாண்டியனின் மகன் மற்றும் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர், லாரி, கார் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜப்பான் நாட்டுக்கு அனுப்ப ரூ.1.10 கோடி மதிப்புள்ள முந்திரியுடன் துறைமுகம் சென்ற லாரி
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான முந்திரி ஆலையில் இருந்து 12 டன் எடை கொண்ட 1.10 கோடி மதிப்பிலான முந்திரி லோடை ஏற்றி ஜப்பான் நாட்டிற்கு அனுப்ப தூத்துக்குடி துறைமுகத்தை நோக்கி லாரி சென்றுள்ளது. லாரியை டிரைவர் ஹரி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
ஐயோ மாமா 10 லட்சம் கொடுத்திடுங்க.. என்னை கத்தியால் கீறிட்டாங்க.. கடத்தல் நாடகம் போட்ட இளைஞர் கைது
ஓட்டுநரை தாக்கிவிட்டு ரூ.1.10 கோடி மதிப்புள்ள முந்திரி லாரியை கடத்திய கும்பல்
தூத்துக்குடி மாவட்டம் நோக்கி செல்லும் நிலையில் புதுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியை காட்டி லாரியை மடக்கி உள்ளனர். பயந்துபோன லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தியுள்ளார். அந்த மர்ம கும்பல் ஓட்டுநர் ஹரியை கத்தியை காட்டி மிரட்டி லாரியை கடத்திச் சென்றுள்ளது. லாரியை ஒரு மர்ம கும்பல் கத்தியைக்காட்டி மடக்கி தன்னை தாக்கி விட்டு முந்திரி லோடுடன் கடத்திச் சென்று விட்டதாக முந்திரி ஆலை மேலாளர் ஹரிகரனிடம் ஓட்டுநர் ஹரி தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு விரைந்து வந்த ஹரிகரன் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் முந்திரி லோடுடன் லாரி கடத்தப்பட்டது குறித்து புகார் அளித்தார்.
உடனடியாக களத்தில் குதித்த புதுக்கோட்டை போலீஸார்
புகாரைப்பெற்ற தூத்துக்குடி டிஎஸ்பி சந்தீஸ்குமார் தலைமையிலான 10 க்கும் மேற்பட்ட போலீஸார் லாரியை தீவிரமாக தேடினர். லாரியில் ஜிபிஎஸ் கருவி உள்ளதால் அதை வைத்து லாரியை கண்காணிக்க முடிவு செய்து ஆய்வு செய்தபோது , லாரிய கடத்திய மர்ம கும்பல் லாரியில் உள்ள (GPS) ஜிபிஎஸ் கருவியை தூக்கி எறிந்துவிட்டு லாரியை ஓட்டிச் சென்றது தெரியவந்தது.
திட்டமிட்டு போலீஸாரை குழப்பிய கடத்தல்காரர்கள்
இதனால் தேடுதல் வேட்டையில் தொய்வு ஏற்பட்டது. உடனடியாக தூத்துக்குடி ஹைவேஸில் உள்ள சுங்கச்சாவடிகள், சாலையில் உள்ள முக்கிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ஒரு தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. ஓட்டுநரின் மற்றொரு செல்போன் லாரியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதை வைத்து அதன் சிக்னலை ட்ராக் செய்தனர். இதனிடையே லாரி நாமக்கல் நோக்கி செல்வது தனிப்படை போலீஸுக்கு தெரியவந்தது.
ஸ்கெட்ச் போட்டு பிடித்த போலீஸார்
லாரியை போலீஸார் பிடிப்பதற்காக வேகமாக பின் தொடர்ந்தனர். போலீஸார் பின்தொடர்வதை தெரிந்த மர்ம கும்பல் எப்படியும் சிக்கிக்கொள்வோம் எனத் தெரிந்ததால் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மேட்டுக்காடு பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றனர். போலீஸார் லாரியை மீட்டனர், ஆனால் லாரியில் யாரும் இல்லாததை அறிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் லாரி கடந்து வந்த சுங்கச்சாவடியை ஆய்வு செய்தனர்.
சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன்
அப்போது லாரியுடன் மஞ்சள் நிற கார் ஒன்று செல்வதை அறிந்தனர். அதன் ஃபாஸ்டேக் பார்கோடை வைத்து தேடினர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் திம்மநாயக்கன்பட்டி பகுதியில் சாலையில் நின்ற காரை போலீஸார் கண்டறிந்து பிடித்து விசாரித்தபோது கடத்தலில் ஈடுபட்ட கும்பல் இருப்பது தெரியவந்தது. காரில் முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் மகன் ஜெபசிங் இருந்தார். அவர் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் செல்வாக்குமிக்க செல்லப்பாண்டியன்
கடத்தலில் ஈடுபட்ட கார் மற்றும் லாரியை தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ்குமார் தலைமையிலான போலீஸார் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். முந்திரி லாரி கடத்தலில் முன்னாள் அமைச்சரின் மகன் சிக்கியுள்ளது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்லப்பாண்டியன் தற்போது அதிமுகவின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக உள்ளார். மாவட்டச் செயலாளராக இருந்த இவர் பின்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.