சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அவமரியாதை... கன்னியாகுமரியில் பந்த்.. பஸ் ஓடவில்லை!
Recommended Video

நாகர்கோவில்: கேரள அரசை கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், கேரள மாநில ஐ.பி.எஸ். அதிகாரி யதீஷ் சந்திரா என்பவருக்கும் இடையே பாஜக தொண்டர்களின் கார்களை அனுமதிப்பது தொடர்பாக, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்தி யதீஷ் சந்திரா வாதிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நிறுத்தி சபரிமலையில் அவமரியாதை செய்யப்பட்டதை கண்டித்தும், ஐ.பி.எஸ். அதிகாரி யதீஷ் சந்திரா மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

வியாழக்கிழமை இரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டன. முழு அடைப்பு காரணமாக, கன்னியாகுமரியிலிருந்து கேரளாவிற்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் பஸ்கள் களியக்காவிளை எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

இதனால், பயணிகள் தவிப்புக்குள்ளாகினர். அதேபோல், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போராட்டம் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். பாஜக சார்பிலான முழு அடைப்பால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக - கேரள எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications