இவங்களுக்கு இது தான் வேலையே! இன்ஸ்டாவில் காதல் வலை.. பாலியல் தொழில் படுகுழியில்! பெற்றோர்களே உஷார்!
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் புதுக்கடை அருகே இன்ஸ்டா மூலம் காதல் வலை விரித்து 14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த அழைத்து செல்ல முயன்ற கோயம்புத்தூரை சேர்ந்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் இளைஞர்கள் எப்போதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். குறிப்பாக ஆண்கள் பெண்கள் என பலரும் இன்ஸ்டாகிராமில் உலாவி வருகின்றனர்.
சில இளைஞர்கள் பார்த்தவுடன் இளம்பெண்கள் மீது ஆசை கொண்டு காதல் வலை வீசுவது வழக்கம். ஒருவேளை அதில் சிக்கிக் கொண்டால் சிரமம் தான். பாலியல் வன்கொடுமை, நகை பணம் திருட்டு, ஏன் பாலியல் தொழிலில் கூட தள்ளி விடுவார்கள்.

அப்படி ஒரு சம்பவம் தான் கன்னியாகுமரியில் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி குமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை இன்ஸ்டாகிராம் மூலம் கோயம்புத்தூரை சேர்ந்த சக்தி என்ற வாலிபர் காதல் வலை விரித்து பழகி வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக இருவரும் இன்ஸ்டா மூலம் பேசி பழகி வந்த நிலையில் சிறுமியை நேரில் பார்க்க ஆசையாக இருப்பதாக கூறி தனிமையில் சந்திக்க வேண்டும் என்று சக்தி கூறி அழைத்துள்ளார். முதலில் சிறுமி மறுக்கவே அந்த வாலிபர் தொடர்ந்து வற்புறுத்தியதை தொடர்ந்து குமரி மாவட்டத்திற்கு வாலிபர் வந்தால் சந்திக்கலாம் என்று கூறி உள்ளார்.
இதனையடுத்து சக்தி கோயம்புத்தூரில் இருந்து தனது நண்பர்கள் சந்தோஷ், பரத், தோழிகளான வளையாபதி, மஞ்சுளா ஆகியோருடன் கன்னியாகுமரிக்கு வந்து அறை எடுத்து தங்கி இருந்து கொண்டு சிறுமியை கன்னியாகுமரிக்கு அழைத்துள்ளனர். இதனை நம்பி கன்னியாகுமரிக்கு சென்ற சிறுமியை முதலில் ஆசை வார்த்தைகள் கூறி கோயம்புத்தூர் அழைத்து செல்ல முயன்று அதற்காக பணம் தேவை இருப்பதாக கூறி சிறுமியின் கழுத்தில் கிடந்த ஒன்றே கால் சவரன் நகையை கழற்றி விற்பனை செய்துள்ளனர்.
தொடர்ந்து அதில் கிடைத்த பணத்தை கொண்டு உல்லாசமாக இருக்க நினைத்தபோது சிறுமியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை எனக்கூறி புதுக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை கொண்டு இடத்தை சோதனை செய்தபோது அவர்கள் தங்கி இருப்பது கன்னியாகுமரி என தெரியவந்தது. இதனையடுத்து அதிரடியாக கன்னியாகுமரி விரைந்த போலீசார் அங்கு தங்கி இருந்த சிறுமியை மீட்க முயன்றனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த பரத் என்பவர் தப்பி ஓடவே மீதமிருந்த பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்திய போது இவர்கள் கோயமுத்தூரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு இதையே தொழிலாக செய்து வந்ததும், இளம்பெண்களை இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விற்பனை செய்த நகை உள்ளிட்டவற்றை மீட்டு தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றும் கும்பல்கள் குறித்து பலவித விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் எப்போதும் செல்போனில் மூழ்கிக் கிடக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளை பெற்றோரும் கவனிக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் போலீசார்.












Click it and Unblock the Notifications