கன்னியாகுமரி புதுப்பெண் மரணம்.. பிரேத பரிசோதனைக்கு சிக்கல்.. தந்தையை தேடும் போலீஸ்.. என்ன காரணம்?
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நடராஜன் என்பவரது மனைவி காயத்ரி கல்யாணமாகி 45 நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தற்கொலைக்கு என்ன காரணம் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் மேலத்தெரு மந்தவிளையை சேர்ந்தவர் 37 வயதாகும் நடராஜன் என்பவர் கன்னியாகுமரி நகரை ஒட்டிய கொட்டாரத்தில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். ஓட்டல் அதிபரான நடராஜனுக்கு அண்மையில் தான் கல்யாணம் நடந்தது

கோயம்புத்தூர் பீளமேடு பகுதியை சேர்ந்த காயத்ரி (32) என்பவருடன் நடராஜனுக்கு கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி கன்னியாகுமரி பகுதியில் உள்ள கோவிலில் பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் இனிதே திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த ஒன்றரை மாதங்கள் கூட ஆகாத நிலையில் கடந்த டிசம்பர் 12ம் தேதி (செவ்வாய்கிழமை ) இரவு காயத்ரி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஒரு அறைக்குள் சென்றார். அங்கு திடீரென மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் வீட்டுக்கு வந்த நடராஜன் தனது மனைவி காயத்ரி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதிருக்கிறார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர். உடடினயாக அவர்கள் கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயத்ரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆன 45 நாளில் காயத்ரி தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது உடனடியாக தெரியவில்லை. பிறகு அவர் தற்கொலை செய்த அறையில் ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா? என போலீசார் வீடு முழுவதும் சோதனை செய்து பார்த்தனர். ஆனால் கடிதம் ஏதும் சிக்கவில்லை.
இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆர்.டி.ஓ. விசாரணையும் தொடங்கி உள்ளது. இந்நிலையில் நடராஜனின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், அவரை பார்த்து விட்டு வீட்டுக்கு நடராஜன் தாமதமாக திரும்பிய நிலையில் காயத்ரி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தகவல்கள் வெளியாகி உள்ளது. .
மேலும் காயத்ரி காப்பகத்தில் தங்கி இருந்த போது சாமிதோப்பு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தோழியாக பழகி வந்ததன் அடிப்படையில் அந்த பெண்ணின் வீட்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு காயத்ரி வந்து தங்கி இருக்கிறார். அப்போது அந்த பெண்ணின் தந்தை மூலம் காயத்ரியை, நடராஜனுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.
திருமணத்தின் போது வரதட்சணை எதுவும் கொடுக்கப்படவில்லை. காயத்ரி தனக்கு பெற்றோர் இல்லை என கூறியுள்ளார். ஆனால் காயத்ரிக்கு தந்தை இருப்பதாகவும் அவரை தேடி வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர். இந்த காரணத்தால் புதுப்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் பிரேத பரிசோதனை நடைபெறாமல் காயத்ரி உடல் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications