சர்சுகளுக்கு “குறி” -பர்தா அணிந்த உருவம்! பகலில் தொழிலதிபர்.. இரவில் திருடன் - சிக்கியது எப்படி?
கன்னியாகுமரி: கடந்த 5 ஆண்டுகளாக முக்கிய தேவாலயங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட எம்.பி.ஏ பட்டதாரி மற்றும் பெண் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளார்கள். அவர்களிடம் 50 சவரன் நகைகள் மீட்கப்பட்டு உள்ளன. கொள்ளையடித்த பணத்தில் பல ஏக்கர் நிலத்தில் சொந்தமாக கோழிப்பண்ணை தொடங்கியதுடன் மனைவிக்கும், தோழிக்கும் தனித்தனியே சொகுசு வீடு, சொகுசு கார் என தொழிலதிபர்போல் வாழ்ந்து வந்த இளைஞர் சிசிடிவியில் பதிவான இருசக்கர வாகன எண்ணால் சிக்கியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களாக புகழ் பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு புகும் மர்ம நபர் உண்டியலை உடைத்து லட்ச கணக்கான பணத்தை கொள்ளையடித்து செல்வதோடு, மாதா சிலைகளில் அணிந்திருக்கும் தங்க நகைகளையும் திருடி சென்று வந்துள்ளார்.
அதிமுக குறித்த தேர்தல் ஆணையத்தின் குழப்பமான நடவடிக்கை- உச்சநீதிமன்றத்தில் அனல் பறக்க போகும் வாதம்?
கடந்த ஜனவரி மாதம் புதிதாக கட்டப்பட்டு அர்பணிக்கப்பட்ட புதூர் புனித லூசியாள் தேவாலயம், பிப்ரவரி மாதம் குளச்சல் காணிக்கை அன்னை தேவாலயத்தில் நள்ளிரவு புகுந்த மர்ம நபர் உண்டியலை உடைத்து லட்ச கணக்கான பணத்தையும் தங்க நகைகளையும் திருடி சென்றார்.
தனிப்படை விசாரணை
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தேவாலயங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபடும் மர்ம நபரை பிடிக்க எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி தங்கராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
சிசிடிவியில் ஆய்வு
தனிப்படை போலீசார் கொள்ளை அரங்கேறிய தேவாலயங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது பர்தா மற்றும் ஹெல்மட் அணிந்து தேவாலயத்திற்குள் புகும் மர்ம நபர் உண்டியலை உடைத்து பணத்தையும் நகைகளையும் மூட்டை கட்டி எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. தொடர்ந்து தேவாலய சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
பைக் எண்
அப்போது பகல் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து பர்தா அணிந்த பெண்ணுடன் ஜோடியாக வரும் மர்ம நபர் தேவாலயங்களை நோட்டமிடுவது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவியில் பதிவான அந்த இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அது கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை பகுதியை சேர்ந்த ஷாபுமோன் என்பவரின் பெயரில் உள்ளது தெரியவந்தது.
மடக்கிப்பிடித்த போலீஸ்
இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஷாபுமோனை தனிப்படை போலீசார் தேடி ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், ஷாபுமோன் தனது இருசக்கர வாகனத்தில் பர்தா அணிந்த பெண்ணுடன் குளச்சல் வெட்டுமடை என்ற பகுதியில் வரும் போது அவரை சுற்றி வளைத்த போலீசார், கைது செய்து குளச்சல் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
எம்பிஏ பட்டதாரி
விசாரணையில் கப்பியறை பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரியான ஷாபுமோன் வேலை கிடைக்காததால் கழிந்த 5 வருடங்களுக்கு முன் தேவாலய உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்து வந்ததும், அந்த பணத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்தது. அப்போது அழகியபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த கணவனை இழந்த நூர்ஜகான் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
பெண்ணுடன் பழக்கம்
அவரையும் தன்னுடன் சேர்த்து கொண்டு பகலில் தனது இருசக்கர வாகத்தில் ஹெல்மட் அணிந்து பர்தா அணிந்து வரும் நூர்ஜகானுடன் தேவாலயங்களை நோட்டமிடுவதும் நள்ளிரவில் அந்த பெண்ணுடன் தேவாலயங்களில் சென்று பர்தா ஹெல்மட் அணிந்து ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி மூட்டைகளில் பணத்தையும் நகைகளையும் கட்டி இருவரும் எடுத்து செல்வதும் தெரியவந்தது.
எவ்வளவு கொள்ளை?
கடந்த 5 ஆண்டுகளில் இருவரும் குளச்சல், புதூர், திங்கள்சந்தை, தக்கலை, அழகியமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 17 பெரிய தேவாலயங்களில் உண்டியல் உடைத்து சுமார் 30 லட்ச ரூபாய் ரொக்கம் 200 சவரனுக்கு மேல் தங்க நகைகளை கொள்ளையடித்து உள்ளனர். இந்த பணத்தில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் சொந்தமாக பல ஏக்கர் நிலத்தை வாங்கி கோழிப்பண்ணை நடத்தி வந்துள்ளார் ஷாபுமோன்.
திருமணம்
அத்துடன் நூர்ஜகானுக்கு காவல்கிணறு பகுதியில் ஒரு சொகுசு வீடு வாங்கிக்கொடுத்து இருக்கிறார். இது அல்லாமல் கடந்த ஆண்டு முன் காவல்கிணறு பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஷாபுமோன், அவருக்கும் தனியாக ஒரு சொகுசு வீடும் வாங்கி கொடுத்தது தெரியவந்துள்ளது. தற்போது கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு விமர்சையாக பெரும் செலவில் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தியுள்ளார்.
தலைமறைவு வாழ்க்கை
கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியவுடன் சொகுசு காரில் நூர்ஜகானுடன் சுற்றுலா செல்வதோடு நகைகளை வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து பணமாக்கிவிட்டு சொகுசாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து ஷாபுமோன் மற்றும் நூர்ஜகானை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 50 சவரன் நகைகள் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
சிறையில் அடைப்பு
இருவரும் இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதேப்போல் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களிலும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி உள்ள நிலையில், மீண்டும் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். 5 வருடமாக போலீசாரிடம் சிக்காமல் தேவாலங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட எம்.பி.ஏ பட்டதாரி பெண்ணுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.