பொன் ராதாகிருஷ்ணன் கார் மீது நள்ளிரவில் அசுர வேகத்தில் மோதிய பைக்! நிகழ்விடத்திலேயே வாலிபர் பலி!
குமரி: குமரி மாவட்டம் பார்வதிபுரம் அருகே முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கார் மீது இருசக்கர வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்த வாலிபர்கள் மீது அந்த வழியாக வந்த பஸ் ஏறி இறங்கியது. இதில் நெல்லையை சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த மற்றொரு நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன். பாஜகவை சேர்ந்த இவரது காரை டிரைவர் பார்வதிபுரத்தில் இருந்து பால்பண்ணை நோக்கி ஓட்டி வந்தார். நள்ளிரவில் பால்பண்ணை அருகே வந்த போது டிரைவர் காரை மெதுவாக இயக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த சாலையில் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த இளைஞர்கள் எதிர்பாராவிதமாக பொன் ராதாகிருஷ்ணன் கார் மீது மோதி கீழே விழுந்தனர். மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையின் நடுவே தூக்கிவீசப்பட்டனர். அப்போது அதே சாலையில் கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசு பேருந்து, வாலிபர் ஒருவர் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் உயிரிழந்தார்.
பின்னால் இருந்த நபர் படுகாயமடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும், போக்குவரத்து போலீசார் மற்றும் புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடனடியாக அவர்கள் காயமடைந்த வாலிபரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், பலியான இளைஞர் நெல்லையை சேர்ந்தவர் என்றும், காயமடைந்தவர் இருளப்பப்புரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கார் மீது மோதி பஸ் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications