கன்னியாகுமரி சுற்றுலா.. பிற மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள்.. கலெக்டர் எச்சரிக்கை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் சுற்றுலாவிற்கு செல்ல அனுமதிபெற்ற தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிற மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை சுற்றுலாவிற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட பள்ளி, கல்லூரி முதல்வர் மீது சட்டப்படியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் அழகுமீனா எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களில் இருந்தும் முற்றிலும் வித்தியாசமான கலாச்சார பின்னணியை கொண்ட மாவட்டம் என்றால் அது கன்னியாகுமரி மாவட்டம் தான்.கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் கேரளாவிற்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது. திருவனந்தபுரம், நாகர்கோவில் என இரண்டு ஊர்களும் இரு மாநிலங்களில் இருந்து இரண்டிலுமே தமிழர்கள், மலையாளிகள் கணிசமாக வசிக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் எல்லை மாவட்டம் என்பதால் அதிகப்படியான கேரள பதிவெண் கொண்ட வாகனங்களும் ஓடுகின்றன.இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் முக்கியமான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் சுற்றுலாவிற்கு செல்ல அனுமதிபெற்ற தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் கேரள பதிவெண் கொண்ட வானங்களை பயன்படுத்த கூடாது என்று பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிற மாநில வாகனங்களை சுற்றுலா செல்ல பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தும் போது அசம்பாவிதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடிவதில்லை. மேலும் வாகனத்தின் ஆவணங்களை சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பித்து தடையில்லா சான்று பெற்று சுற்றுலா செல்ல வேண்டும்.
பிற மாநில வாகனத்தில் பயணம் செய்யும் மாணவ-மாணவிகளுக்கு விபத்து காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும். எனவே, வருங்காலங்களில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்களை மட்டும் சுற்றுலாவிற்கு பயன்படுத்த வேண்டும், பிற மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை சுற்றுலாவிற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட பள்ளி, கல்லூரி முதல்வர் மீது சட்டப்படியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மீறி இயக்கப்படும் வாகனங்கள் சிறைபிடிக்கப்படுவதுடன் வாகனத்தின் அனுமதிச்சீட்டினை ரத்து செய்ய கேரள மாநில போக்குவரத்து ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications