”தமிழ் மிகவும் அழகான மொழி” கற்றுக் கொள்வதற்கு கடினம்.. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலகல!
கன்னியாகுமரி: இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தமிழ் மொழி குறித்து பேசியுள்ள கருத்துகள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். முதல் நாளில் 600 மீட்டர் தூரம் வரை மட்டுமே நடைபயணத்தை தொடர்ந்த ராகுல் காந்தி, 2ம் நாளில் அகஸ்தீஸ்வரத்தில் தொடங்கினார்.
அப்போது நீர் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் சகோதரரை சந்தித்தார். இதனைத்தொடர்ந்து எவிடன்ஸ் அமைப்பைச் சேர்ந்த சமூக அமைப்புகளை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தார். இப்படி பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

தேநீர் அருந்திய ராகுல் காந்தி
அதன் தொடர்ச்சியாக 3வது நாள் நடைபயணத்தில் இன்று தொடங்கிய ராகுல் காந்தி சாலையோர கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். அதனைத்தொடர்ந்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுடன் கலந்துரையாடினார். அப்போது ராகுல் காந்தி அவர்களுக்கு தேநீர் வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

ராகுல் காந்தி பேட்டி
இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்தித்து கூறுகையில், நான் நிச்சயம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைபடுகிறேன். தமிழ் மிகவும் அழகான மொழி. ஆனால் கற்றுக்கொள்வதற்கு கடினம் என நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

விமர்சனங்களை வரவேற்கிறேன்
தொடர்ந்து நடைபயணம் குறித்த கேள்விக்கு, இந்தியாவின் ஒற்றுமைக்காகவே நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். நடைபயணம் குறித்து பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை வரவேற்கிறேன். காங்கிரஸ் தன்னுடைய பாதையில் சரியாக சென்று கொண்டிருக்கிறது. மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகளை கேட்பதே நடைபயணத்தின் நோக்கம் என்று தெரிவித்தார்.

பாஜக மீது குற்றச்சாட்டு
அதேபோல், நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும் பாஜக அரசு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வருமானவரி, அமலாக்கத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்து பாஜக செயல்படுகிறது. பலரும் பாஜக உடன் கைகுலுக்கி சுமூகமாக செல்ல நினைக்கின்றனர். பலவித கருத்தோட்டங்களை கொண்ட இந்தியாவில் ஒற்றை கருத்தை திணிக்க பாஜக முயற்சி செய்கிறது என்று விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications