உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுத்த பெண்.. கூடங்குளம் விஏஓ செய்த காரியம்! போச்சு தேவைதான்
நெல்லை: பட்டா மாறுதலுக்காக உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கூடங்குளத்தை சேர்ந்த விஜயா என்பவர் மனு அளித்துள்ளார். இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட விஏஒ ஸ்டால்வின் ஜெயசீலன் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அடுத்து தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளார். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறை கைது செய்து வருகிறது. இருந்தாலும் லஞ்சம் வாங்கி சிக்கிக்கொள்ளும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

கஷ்டப்பட்டு அரசு வேலை வாங்கிவிட்டு
கஷ்டப்பட்டு படித்து அரசு துறைகளில் வேலைக்கு சேர்ந்த பலரும், லஞ்சம் வாங்கிக்கொண்டு வேலையில் இருந்து சஸ்பெண்ட் ஆகி கஷ்டப்படுவதையும் பார்க்க முடிகிறது. இதையெல்லாம் தெரிந்தும் கூட லஞ்சம் வாங்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் கூட கடலூரில், பணிக்கு சேர்ந்த சில மாதங்களில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ சதீஷ்குமார், கிராம உதவியாளர் ரமேஷ் உடன் சிக்கினார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு
இந்த நிலையில், நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த விஏஓ 25 ஆயிரம் லஞ்சம் கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வசமாக சிக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
நெல்லை மாவட்டத்தின் கடலோர பகுதியில் அமைந்துள்ள ஊர் கூடங்குளம். இந்த பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய தந்தை அய்யங்கண்ணு பெயரில் ஊரில் ஒன்றரை செண்ட் வீட்டு மனை இருந்தது. இந்த வீட்டு மனையை தனது பெயரில் பட்டா மாற்றம் செய்வதற்காக பாஸ்கரின் மனைவி விஜயா கடந்த மாதம் 21ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளித்தார்.
ரூ.25 ஆயிரம் வாங்கினார்
இந்த மனு தொடர்பாக கூடங்குளம் விஏஓ ஸ்டால்வின் ஜெயசீலன் விசாரணை மேற்கொண்டார். பின்னர் வீட்டு மனை நிலத்தின் பட்டா பெயர் மாற்றம் செய்ய விஜயாவிடம் 25 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயா, லஞ்சம் கேட்ட விஏஓவுக்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்தார். இதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், விஜயாவிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அனுப்பினர். இந்த பணத்தை எடுத்துக்கொண்டு விஜயா விஏஓ அலுவலகத்திற்கு சென்று கூடங்குளம் விஏஓ ஸ்டால்வின் ஜெயசீலனிடம் கொடுத்துள்ளார். விஏஓவிடம் கேட்ட பணம் கிடைத்த மகிழ்ச்சியில் வாங்கி வைத்துள்ளார்.
குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்
அடுத்த நொடியே அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஏஓ ஸ்டால்வின் ஜெயசீலனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். லஞ்சம் வாங்கி கைதாகியுள்ள விஏஓ ஸ்டால்வின் ஜெயசீலன் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட விஏஓ ஸ்டால்வின் ஜெயசீலன் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதி ஆகும். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க விஏஓ லஞ்சம் வாங்கிய சம்பவம் கூடங்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications