உண்மையே எப்போதும் வெல்லும்.. அது மோடியை சிறைக்கு தள்ளும்.. ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு!
கன்னியாகுமரி: உண்மையே எப்போதும் வெல்லும், அந்த உண்மை பிரதமர் மோடியை சிறைக்கு தள்ளும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசி இருக்கிறார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி இருக்கிறது. காங்கிரஸ் சார்பாக இன்று கன்னியாகுமரியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். பிரதமர் மோடிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் வைத்தார்.
ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்.. குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.. குமரியில் ராகுல் அதிரடி!
ரபேல் ஒப்பந்தம்
ராகுல் காந்தி தனது பேச்சில், நாம் ரபேல் ஒப்பந்தத்தை எச்ஏஎல் நிறுவனத்திற்கு அளிக்க இருந்தோம். ஆனால் மோடி அதை அனில் அம்பானி நிறுவனத்திற்கு அளித்துவிட்டார்.நாம் செய்ததை விட அதிக தொகையில் ஒப்பந்தம் செய்து இந்தியாவிற்கு இழப்பை ஏற்படுத்திவிட்டார் மோடி. மோடி ரபேல் ஒப்பந்தத்தில் தனியாக பேரம் நடத்தி உள்ளார் .
அம்பானி
30,000 கோடி ரூபாய் பணம் மோடியால் அனில் அம்பானிக்கு அள்ளிக்கொடுக்கப்பட்டு இருக்கிறது. உண்மை வெல்லும் என்று திருவள்ளுவர் கூறினார். அந்த உண்மை மோடியை சிறையில் தள்ளும். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு பிரச்னையை நாங்கள் போக்குவோம். ஜிஎஸ்டியை மாற்றுவோம். மேட் இன் இந்தியா என்பதை கூட மேட் இன் தமிழ்நாடு எழுத வைக்கும் அளவிற்கு மாற்றுவோம். சீனாவின் பொருட்களை புறக்கணித்து தமிழக பொருட்களை உற்பத்தி செய்ய வைப்போம்.
தமிழக மீனவர்கள்
தமிழக மீனவர்களின் பிரச்சனைகள் சரி செய்யப்படும். குமரி மீனவர்கள் நாளுக்கு நாள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் பிரச்சனையை சரி செய்வோம். இந்திய மக்களுக்கான குறைந்த பட்ச ஊதிய திட்டம் கொண்டு வரப்படும்.
என்ன கூட்டணி
திமுக - காங். கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல; மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் கூட்டணி. வடக்கே பட்டேல், தெற்கே காமராஜர் பெயரை பயன்படுத்தி வாக்கு கேட்கிறது பாஜக. ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள். கஜா புயலுக்கு, ஓகி புயலுக்கு கூட நிவாரணம் அளிக்காத அரசுதான் பாஜக அரசு, என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.