இப்படியும் சிக்குவீர்கள் உஷார்... ஆன்லைனில் ஆபாச படம் பார்த்த கணவரிடம் மனைவி படத்தை வைத்து மிரட்டல்
கரூரில் ஆன்லைனில் ஆபாச படம் பார்த்த வங்கி அதிகாரியின் கணவரின் டேட்டாக்களை திரட்டி அவரது மனைவி படத்தை ஆபாசமாக வலைதளத்தில் பதிவு செய்வதாக மிரட்டிய பணம் பறித்த பொறியாளர் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர், அவர்களிடமிருந்து செல்போன், லேப்டாப், இரு சக்கர வாகனம், 3 லட்சம் ரொக்கம் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
Recommended Video
ஜெய் பீம் படம் 5 மொழிகளில் வெளியீடு.. ஹிந்தி மொழியை மட்டும் சூர்யா எதிர்ப்பதா? எச்.ராஜா கடும் கோபம்
வலை விரிக்கும் ஆபாச வலைதளம்
கரூரில் உள்ள ஒரு வங்கியில் உதவி மேலாளராக ஒரு பெண் அதிகாரி பணியாற்றி வருகிறார். அவரது கணவர் சமீபத்தில் தனது செல்போனில் ஆபாசப் படம் ஒன்றை பார்த்துள்ளார். இந்நிலையில் அவரது செல்போனுக்கு ஒரு ஆபாச மெசேஜ் வந்துள்ளது. அதில் அடையாளம் தெரியாத பெண்ணின் ஆபாச படம் வந்துள்ளது. இதைப்பார்த்த அவர் யார் மெசேஜ் அனுப்பியது என்றுத் தெரியாமல் குழம்பிப்போயுள்ளார்.
சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம ஆசாமி செல்போனில் உனக்கு அனுப்பிய படம் எப்படி இருக்கு, உனக்கு அனுப்பிய படத்தைப் போல உனது மனைவியின் ஆபாச படத்தையும் வலைதளத்தில் அனுப்புவேன். என்று கூறியுள்ளார்.
மனைவியின் படத்தை அனுப்பவா?
மனைவியின் ஆபாசப்படத்தை மார்ப் செய்து அனுப்பவா மிரட்டிய நபர் இதனால் அதிர்ந்துபோன கணவர் நீ யார் எனக்கு ஏன் போன் செய்கிறாய் எனக்கேட்டுள்ளார். "நான் யாரா? ஆன்லைனில் ஆபாசப்படம் பார்த்தாயே மறந்துப்போச்சா அடுத்த வீட்டுப்பெண்கள் என்றால் இனிக்குதா? நீ பார்த்த ஆபாச வலைதளம் ஃபிஷிங் வலைதளம், அது உன் டேட்டா, உன் வீட்டில் உள்ளவர்கள் அனைத்து புகைப்படங்கள் அனைத்தையும் எங்களுக்கு தந்துவிட்டது.
இப்ப பார்த்த ஆபாசப்படம் போல் உன் மனைவியின் படத்தை மற்றவர்களுக்கு அனுப்பினால் எப்படி இருக்கும், உன் மனைவி வங்கி அதிகாரி, மானம் போய்விடும், அப்புறம் எங்கே வேலைக்கு போவார் குடும்பத்தோட தற்கொலைதான் என்று மிரட்டிய அவர் அப்படி செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் எனக்கு நீ பணம் தர வேண்டும்" என்று கேட்டு மிரட்டியுள்ளனர்.
தொடர் மிரட்டல் மன உளைச்சல்
இதனால் பயந்துப்போன வங்கி அதிகாரியின் கணவர் google pay மூலம் போனில் மிரட்டிய மர்ம ஆசாமியின் கணக்குக்கு ரூ 49 ஆயிரம் அனுப்பியுள்ளார். அவர் பணம் அனுப்பியும் மீண்டும் மீண்டும் மிரட்டியுள்ளனர். கணவர் ஏதோ மன உளைச்சலில் இருப்பதை கண்டுபிடித்த பெண் வங்கி அதிகாரி விவரம் கேட்க சபலத்தால் தான் ஆன்லைனில் ஆபாச படம் பார்த்ததையும் அதைத் திடர்ந்து வந்த மிரட்டல் கால், தான் ரூ.49000 அனுப்பியது உள்ளிட்ட அனைத்தையும் சொல்லியுள்ளார்.
உடனடியாக பெண் அதிகாரி சைபர் கிரைம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். இது தொடர்பாக அவர்கள் பேசிய செல்போன் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு சைபர் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனியார் வங்கி உதவி மேலாளரின் கணவர் லோகாண்டா என்ற இணைய தளத்தில் ஆபாச விளம்பரம் பார்த்துள்ளார். அதில் அவர்கள் கேட்ட விவரங்களை பதிவு செய்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் அவருடைய செல்போன் எண்ணை வைத்தும், அதன் தகவல்களை திரட்டி, குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை சேகரித்துள்ளனர்.
ஆபாசப்படம் அனுப்பி மிரட்டல்
பின்னர் வங்கி அதிகாரியின் கணவரின் செல்போன் எண்ணிற்கு இணைய தளத்தில் உள்ள ஆபாச புகைப்படங்களை எடுத்து அதில் ஒன்றை அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது போன்று உன் மனைவியின் ஆபாச புகைப்படத்தையும் மார்பிங் செய்து இணைய தளத்தில் வெளி விட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். அவ்வாறு வெளியிடாமல் இருக்க 49000 ரூபாய் google pay அனுப்பும் படி மிரட்டியுள்ளனர். இதனையடுத்து அவர் 49000 ரூபாய் அனுப்பி வைத்துள்ளது தெரிய வந்தது.
வசமாக சிக்கிய கட்டிட பொறியாளர், கொத்தனார்
இதற்கு பயன்படுத்திய செல்போன் எண்கள், வங்கி கணக்கு ஆகியவற்றை கண்டறிந்த சைபர் கிரைம் போலீசார் பொள்ளாச்சியை சார்ந்த 2சிவில் இன்ஜினியராக பணியாற்றும் பிரசாந்த் என்ற 27 வயது இளைஞரையும், அவருக்கு உதவியாக இருந்த அஜீத் குமார்(49) என்கின்ற கொத்தனாரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 லட்சம் ரொக்கம், இரு சக்கர வாகனம், பாஸ்போர்ட், 4 செல்போன்கள், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சைபர் பிரிவு அதிகாரியின் ஆலோசனை
ஆபாச இணைய தளங்களை பார்க்கும் ஆண்களின் சபலத்தை பயன்படுத்தி ஃபிஷிங் இணையதளம் மூலம் இந்த நபர்கள் பணம் பறித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து சைபர் பிரிவு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது.
ஆபாச வலைதளங்களை பார்க்கும் நபர்களை இழுக்க மேலும் சில விளம்பரங்கள் வரும், அதில் மேலும் சில பெண்கள் புகைப்படங்கள், அல்லது காணொளியை வெளியிட்டு இவருடன் பேச வேண்டுமா? இவரது லைவ் காட்சியை காணவேண்டுமா என தூண்டில் போடும் விளம்பரங்கள் வரும். ஆசைப்பட்டு அதை க்ளிக் செய்து அவர்கள் தளத்துக்கு சென்றால் அதில் உள்ள சாஃப்ட்வேர் மூலம் உங்கள் தகவல்களை அவர்களால் திருட முடியும்.
செல்போனில் உள்ள பதிவுகளால் பிரச்சினை
செல்போனில் உள்ள அனைத்து விவரங்களையும் புகைப்படம், காணொளி உள்ளிட்ட அனைத்தையும் எடுக்க முடியும். சிலர் தனது செல்போன் தானே என தனது குடும்பப்பெண்களை சற்று ஆபாசமாக எடுத்திருப்பார்கள், சிலர் தங்கள் அந்தரங்கமாக இருக்கும் புகைப்படம், காணொளியை சேமித்து வைத்திருப்பார்கள். அதுபோன்ற பதிவுகள் இதுபோன்ற மிரட்டல் ஆசாமிகளுக்கு லட்டு மாதிரி.
பின்னர் அதைவைத்து மிரட்டுவார்கள். இன்னும் சிலரை வாட்ஸ் அப் காலில் பெண்கள் அழைப்பார்கள், இவர் சபலிஸ்டாக இருந்தால் அந்தப்பெண்ணுடன் வீடியோ காலில் உரையாடுவார். மறுமுனையில் பேசும் பெண் அவரை நிர்வாணக்கோலத்தில் பார்க்க விரும்புவார். இவரும் 2 பேர் மட்டும்தானே என்று நிர்வாணக்கோலத்தில் நிற்பார். அவ்வளவுதான் சிறிது நேரத்தில் அவரது வாட்ஸ் அப்பில் அவரது நிர்வாணக்கோலம் படமாக அனுப்பப்படும்.
லட்சக்கணக்கில் இழந்த அரசு மருத்துவர், இளைஞர்
இதை உன் உறவினர்கள் நண்பர்களுக்கு அனுப்பாமல் இருக்க பணம் அனுப்பவேண்டும் என கேட்டு மிரட்டுவார்கள். இப்படி மிரட்டியவர்களிடம் சிக்கி சென்னை அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் லட்சக்கணக்கில் பணம் இழந்துள்ளார். ஒரு இளைஞர் பணம் அனுப்பியும் மேலும் பணம் கேட்டு மிரட்ட இல்லை என மறுத்ததால் அவரது தாய் உள்ளிட்ட உறவினர் நண்பர்களுக்கு அவரது நிர்வாணப்படம் அனுப்பப்பட்டதால் அவர் போலீஸுக்கு வந்தார்.
இதுபோன்ற பல கதைகள் உள்ளது. ஆகவே வலைதளத்தை பாதுகாப்பாக கையாளுவது மிக அவசியம், அதேப்போன்று சபலத்துக்கு ஆளாகி கேட்கும் தகவல்களை தராமல் இருப்பது நல்லது" என அந்த அதிகாரி தெரிவித்தார்.