முதல்வர் வர்றாங்க.. சீக்கிரம் ! துரிதகதியில் போடப்பட்ட சாலையில் சிக்கிய பஸ்! தெறித்து ஓடிய பெண்கள்!
கரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகையையொட்டி அவசர அவசரமாக சாலைகள் அமைக்கப்பட்டதாகவும், அவ்வாறு துரிதகதியில் அமைக்கப்பட்ட ஒரு சாலையில் பேருந்து ஒன்று சிக்கிக்கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று முதன்முறையாக கரூர் மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார். நேற்று கரூர் வருகை தந்த அவருக்கு மாவட்ட திமுக சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக கரூர் வருகை தந்த முதல்வருக்கு குளித்தலை, சித்தலவாய், மாயனூர், வெங்கக்கல்பட்டி ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கூடி நின்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

முதல்வர் ஸ்டாலின்
இரவு பயணியர் மாளிகையில், தொழில் முனைவோர்களை சந்தித்து கோரிக்கை மனு பெற்ற முதல்வர் இரவு ஓய்வு எடுத்த பின், இன்று காலை 10 மணியளவில், திருமாநிலையூரில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட மேடையில் 76 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகி, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ஏற்பாடுகள் தீவிரம்
முதல்வர் வருகையொட்டி மிக பிரம்மாண்ட ஏற்பாடுகளை கரூர் மாவட்ட அமைச்சரும் திமுக பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி செய்திருந்தார். குறிப்பாக நகர் முழுவதும் தூய்மை பணியாளர்களைக் கொண்டு இரவோடு இரவாக சுத்தப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சுழற்சி முறையில் அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். மேலும் முதல்வர் திடீர் ஆய்வு மேற்கொள்வார் என கூறப்பட்டத்தால் நகரின் பல்வேறு பகுதிகளில் திடீர் திடீரென கற்கள், தார் டின்கள் இறக்கப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டது.

சிக்கிய பேருந்து
அப்படி அவசர அவசரமாக அமைக்கப்பட்ட ஒரு சாலையில் தான் பேருந்து ஒன்று சிக்கிக்கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கரூரிலிருந்து தாந்தோணிமலை செல்லும் முக்கிய சாலையான மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் சாலையில் அவசர அவசரமாக சீரமைப்பு பணியை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மேற்கொண்டனர். ஆனால் அவசர கோலத்தில் தரம் அற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் மேலோட்டமாக தார் கலவையை ஊழியர்கள் கொட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

மக்கள் கோரிக்கை
மேலும் பள்ளங்களை உரிய முறையில் அவர்கள் நிரப்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாலையில் திடீரென சிக்கிக்கொண்டது. இதனால் பேருந்தில் பயணம் செய்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடிய நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து அங்கு வந்த போலீசார் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பேருந்தை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். முதல்வர் வருகைக்காக அவசர அவசரமாக சாலைகள் அமைக்கப்படுவதாகவும் அவ்வாறு அமைக்கப்படும் சாலைகள் தரமற்ற நிலையில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.












Click it and Unblock the Notifications