ஒருவழியாக பதவியை தட்டித் தூக்கிய திமுக! ‘கிட்னாப்’, சேஸிங் மட்டுமா.. “கிராஸ் வோட்டிங்”கும்.. ஆஹா!
கரூர் : கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் 5 முறை தள்ளி வைக்கப்பட்டு, பல ரன்னிங், சேஸிங், கிட்னாப்பிங் சம்பவங்களைக் கடந்து கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இதில், திமுக கவுன்சிலர் தேன்மொழி வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் நடைபெற்றபோது அதிமுக பெரும் பலத்துடன் இருந்த நிலையில், தற்போது துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்றியுள்ளது திமுக.
திமுக சார்பில் போட்டியிட்ட தேன்மொழி தியாகராஜன் 7 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட ரமேஷ் 4 வாக்குகள் பெற்றார். 7 வாக்குகள் பெற்ற திமுகவை சேர்ந்த தேன்மொழி மாவட்ட துணைத் தலைவராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
முன்னதாக துணைத்தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட திருவிக என்பவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக கவுன்சிலர்களுடன் காரில் வந்து கொண்டிருந்த போது வேடசந்தூர் பகுதியில் ஒரு கும்பல் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கரூர் மாவட்ட ஊராட்சி
கரூர் மாவட்ட ஊராட்சிக் குழுவில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. 2019ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 வார்டுகளை அதிமுக கூட்டணியும், 3 வார்டுகளை திமுகவும் கைப்பற்றியது. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த எம்.எஸ்.கண்ணதாசன் தேர்வானார். அதிமுகவைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் முத்துக்குமார் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரியிடம் தோல்வியடைந்தார்.

6:6 சம பலம்
முத்துக்குமார் ராஜினாமா செய்த வார்டில் நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கண்ணையன் வெற்றி பெற்றார். இதனால் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் திமுகவின் பலம் 4 ஆக அதிகரித்தது. அதிமுகவின் பலம் 8 ஆக குறைந்தது. துணைத்தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த பதவிக்கான தேர்தல் பல்வேறு காரணங்களால் 5 முறை தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே அதிமுகவைச் சேர்ந்த இரண்டு வார்டு கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர். இதனால், திமுக - அதிமுக பலம் 6:6 என சரிசமம் ஆனது.

மீண்டும் தேர்தல்
இந்தநிலையில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது என்றும், நீதிபதிகள் மூலம் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 19-ஆம் தேதி துணைத்தலைவர் தேர்தல் மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.

கடத்திய கும்பல்
மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட கரூர் மாவட்ட கவுன்சிலர் திருவிக என்பவர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக கவுன்சிலர்களுடன் திண்டுக்கல்லில் இருந்து காரில் கரூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வேடசந்தூர் பகுதியில் காரில் வந்த திருவிகவை, 4 கார்களில் வந்த திமுகவினர் கடத்திச் சென்று விட்டனர். பின்னர், தேர்தல் முடிந்தபிறகே அவர் மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக vs திமுக
இதனால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க நிர்வாகிகள் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து கவுன்சிலர் திருவிகவிற்கு பதிலாக துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட அதிமுக சார்பில் கரூர் மாவட்ட 12-வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். தி.மு.க சார்பில் 5-வது வார்டு கவுன்சிலர் தேன்மொழி தியாகராஜன் என்பவர் போட்டியிட்டார்.

மாற்றம் நிகழ்ந்திருக்காது
இதையடுத்து திமுகவை சேர்ந்த 6 கவுன்சிலர்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்த 5 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டு, மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் தேர்தல் விவரங்களை ஆய்வு செய்து நடந்து முடிந்த மாவட்ட துணைத் தலைவருக்கான தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என உத்தரவிட்டது. தேர்தலன்று தான் கடத்தப்பட்டதால் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி அதிமுக கவுன்சிலர் திருவிக நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், திருவிக தேர்தல் அன்று வாக்களித்திருந்தாலும் தேர்தல் முடிவில் மாற்றம் நிகழ்ந்திருக்கப் போவதில்லை, எனவே நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகளை வெளியிடலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிராஸ் வோட்டிங்
அதன்படி கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேற்று இரவு தேர்தல் முடிவுகளை வெளியிட்டார். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட தேன்மொழி தியாகராஜன் 7 வாக்குகள் பெற்று மாவட்ட துணைத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர் ரமேஷ் 4 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார். இதனால் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவியை திமுக கைப்பற்றி உள்ளது. 5 முறை தள்ளி வைக்கப்பட்டு நடந்த தேர்தலில் அதிமுக கவுன்சிலரின் 'கிராஸ் வோட்டிங்' துணையுடன் எளிதாக வென்றுள்ளது திமுக.












Click it and Unblock the Notifications