அதிமுக சண்டைக்கு இதுதான் காரணம்.. தேமுதிகவில் நடக்காது.. திமுகவையும் இழுத்துவிட்ட விஜய பிரபாகரன்!
கரூர் : தேமுதிக குடும்பக்கட்சி. குடும்பம் இல்லாததால் தான் அதிமுகவில் நான் பெருசா, நீ பெருசா என சண்டையிட்டு திண்டாடி வருகின்றனர் என தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
தேமுதிக மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கு பேரம் பேசியதை நிரூபித்தால் கட்சியை கலைக்கத் தயார் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
திமுக, காங்கிரஸ் கட்சிகளை வாரிசுகள் தான் சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர். அதுபோலத்தான் தேமுதிகவில் எனது தாயார் பிரேமலதா, மாமா சுதீஷ் மற்றும் நானும் கட்சிக்காக உழைத்து வருகிறோம் என விஜய பிரபாகரன் பேசியுள்ளார்.

தேமுதிக
விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தீவிரமாக அரசியல் பணிகளில் ஈடுபடுவதில்லை. பிரேமலதாவே தேமுதிக நின்று முன்னின்று நடத்துகிறார். இந்நிலையில், அவரது மகன் விஜய பிரபாகரன், கட்சி நிகழ்ச்சிகள், கட்சிப் பிரமுகர் இல்ல விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். விரைவில் விஜய பிரபாகரனுக்கு பெரிய பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

விஜய பிரபாகரன்
இந்நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பனம்பட்டியில் தேமுதிக கடவூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் கதிர்வேல் இல்ல காதணி விழாவில் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவில் நிலவி வரும் மோதல் பற்றியும் பேசியுள்ளார்.

குடும்பக் கட்சி
செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், "தேமுதிக ஒரு குடும்பக் கட்சி. திமுகவை கருணாநிதிக்குப் பிறகு அவரது மகன் ஸ்டாலின், பேரன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் காங்கிரஸ் கட்சியை சோனியா காந்தி அவரைத் தொடர்ந்து ராகுல் காந்தி என சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர். அதுபோலத்தான் தேமுதிகவை எனது தாயார் பிரேமலதா, மாமா சுதீஷ் மற்றும் நானும் கட்சிக்காக உழைத்து வருகிறோம். குடும்பம் இல்லாததால் தான் அதிமுகவில் தற்போது நான் பெரிதா? நீ பெரிதா? என்று போட்டி நிலவி திண்டாடி வருகின்றனர்.

சொத்தை விற்று
தேமுதிக கட்சியைச் சுற்றிதான் அரசியல் நகர்வுகள் நடைபெறுகின்றன. விஜயகாந்த் கட்சிக்காக தனது சொந்த சொத்தை விற்று கட்சியை வழி நடத்தி வருக்கிறார். கட்சி ஆரம்பிப்பதற்கு முன் எவ்வளவு சொத்துக்கள் இருந்தது, தற்போது எவ்வளவு சொத்துக்கள் என்பது உள்ளது என்பதை வெளிப்படையாக கூறத் தயார்.

கட்சியை கலைக்கத் தயார்
கடந்த கால தேர்தல்களில் தேமுதிக மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்காக பேரம் பேசியதாக பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். கூட்டணி பேரம் பேசுவது எங்கள் நோக்கமில்லை. அதனை நிரூபித்தால் கட்சியைக் கலைத்து விடுகிறேன். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தலைமையான கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும், நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் அயராது பாடுபட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications