விஜய்க்கு எல்லாம் அட்வைஸ் பண்ண தேவையில்லை.. செந்தில் பாலாஜி எப்படி வந்தார்? நறுக்கென பேசிய கமல்ஹாசன்
கரூர்: விஜய்க்கு நான் அறிவுரை சொல்ல தேவையில்லை, இனி அவர் ஒரு தலைவராக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும், செந்தில் பாலாஜி எப்படி உடனடியாக வந்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது அவருடைய சொந்த ஊர், அவர் எப்படி உடனடியாக வந்தார் என்று கேள்வி எழுப்புவது தவறு எனவும் கூறியுள்ளார்.
கரூரில் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட 41 உயிரிழப்புகளுக்கும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிகழ்வும் அந்தக் கட்சிக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.
அதே நேரத்தில் தமிழக அரசியலிலும் இந்த சம்பவம் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரடியாக கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

கரூர் கூட்ட நெரிசல்
அந்த வகையில், கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியை பார்வையிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உயிரிழந்த மகேஸ்வரி இல்லத்திற்கு சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது கமல் பண்பாட்டு மையம் சார்பில் நிவாரண உதவியாக 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை உறவினர்களிடம் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," ஊடகங்கள் வாயிலாக பல உண்மைகள் இன்று வெளிவந்துள்ளன. இது யாரையும் பாராட்டுவதற்கான நேரம் இல்லை. செந்தில் பாலாஜி உடனடியாக எப்படி வந்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது அவருடைய சொந்த ஊர், அவர் எப்படி உடனடியாக வந்தார் என்று கேள்வி எழுப்புவது தவறு.
கமல்ஹாசன் கருத்து
உயிரிழந்தவர்களை எத்தனை பேர் என்று எண்ணிக்கை அளவில் பார்க்கக் கூடாது. அவர்களுக்கும் குடும்பம் உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். அரசும், முதல்வரும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். இது போன்ற கூட்டங்களை ஊரிலிருந்து ஒதுக்குப்புறமான இடங்களில் நடத்த வேண்டும். தவெக சார்பில் முன்னதாக அனுமதி கேட்கப்பட்ட லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் ஆற்றில் மக்கள் விழுந்திருந்தால், இதை விட அதிக உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும். நான் பேசுவது மனிதம்.
உயிரிழந்தோர் குடும்பம்
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசுவது அரசியல். இந்த நேரத்தில் அரசியல் பேசுவது தவறு. அடுத்தடுத்த மாதங்களில் அது குறித்துப் பேசலாம். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, அனைத்துக் கட்சிகளும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும். முதலமைச்சரும் அதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும். நாம் எவ்வளவு பணம் கொடுத்தாலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஈடாகாது. சார் எவ்வளவு பணம் கொடுத்தார் என்று போட்டி வேண்டாம்.
அரசியல் விமர்சனம்
அவர்களுக்கு நீதிதான் வேண்டும். இது யாரையும் குற்றம் சொல்வதற்கான நேரமில்லை. இதில் நான் உட்பட அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். விஜய்க்கு நான் அறிவுரை சொல்லத் தேவையில்லை. நான் என் சார்பில் மட்டுமே பேச வந்திருக்கிறேன். அரசியலில் என்னை விட மூத்தவர்கள் உள்ளனர். அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை நீங்கள் என்னிடம் கேட்கக் கூடாது.
விஜய்க்கு அறிவுரை
காலம் கடந்து அறிவுரை சொல்வதில் அர்த்தம் இல்லை. இனி அவர் ஒரு தலைவராகச் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும் என்றுதான் என்னுடைய வேண்டுகோள். நான் எவ்வளவு நிதி உதவி கொடுத்தேன் என்று சொல்லிக்காட்டுவது அசிங்கம். தவெகவினரைச் சாடுவதற்கான நேரம் இது இல்லை. சட்டம் ஏற்பாடு செய்து வருகிறது. கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. SIT குழு அமைக்கப்பட்டுள்ளது. நாம் விசாரிப்பதை விட SIT குழுவின் விசாரணை ஆழமாகவும், உறுதியாகவும், நேர்மையாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications