அதிக அளவில் வருவாய்.. கரூர் டாஸ்மாக் மேனேஜருக்கு சான்றிதழ்! சர்ச்சையால் திரும்ப பெறப்பட்டு திருத்தம்
அதிக அளவில் வருவாய் ஈட்டி கொடுத்ததாக கரூர் டாஸ்மாக் அதிகாரி உள்பட 4 பேருக்கு வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ் திரும்ப பெறப்பட்டது.
கரூர்: அதிக அளவில் வருவாய் ஈட்டி கொடுத்ததாக டாஸ்மாக் அதிகாரி உள்பட 4 பேருக்கு வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ் நேற்றைய தினம் திரும்ப பெறப்பட்டு அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டது.
74 ஆவது குடியரசுத் தினவிழா நாடு முழுவதும் கடந்த 26ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழா, குடியரசு தின விழாக்களில் சிறப்பாக செயல்பட்டவர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிப்பது வழக்கம்.
அந்த வகையில் மாநில வளர்ச்சிக்காக பல்வேறு அரசு துறையில் அயராது உழைத்து பணியாற்றிய ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பாக குடியரசு தின விழாவில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதிக வசூல்.. டாஸ்மாக் வருமானத்தை பாராட்டி சான்று வழங்கிய கலெக்டர்.. கரூரில் வெடித்த சர்ச்சை
விளையாட்டு மைதானம்
அதன்படி கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று முன் தினம் குடியரசு தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். மேலும் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பல்வேறு துறைகள் சார்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் கேடயமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டம்
இதில் கரூர் மாவட்டத்தில் மது விற்பனையில் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சண்முக வடிவேல், மேற்பார்வையாளர்கள் சிவக்குமார், ஆறுமுகம், விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழை ஆட்சியர் பிரபு சங்கர் வழங்கினார்.
பாராட்டுச் சான்றிதழ்
இந்த பாராட்டு சான்றிதழ் சமூகவலைதளங்களில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது. டாஸ்மாக்கில் அதிக வருவாய் ஈட்டி கொடுத்ததற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியதற்கு கிண்டல் செய்து மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்டது. இதையடுத்து கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சண்முக வடிவேல், மேற்பார்வையாளர்கள் சிவக்குமார், ஆறுமுகம், விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேருக்கு வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ் திரும்ப பெறப்பட்டது.
திரும்ப வழங்கப்பட்ட சான்றிதழ்
இந்த நிலையில் திரும்ப பெறப்பட்ட சான்றிதழில் இருந்த டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததற்காக என்ற வார்த்தையை மட்டும் திருத்தம் செய்தனர். அதில் டாஸ்மாக் நிர்வாகத்தில் சிறந்தப் பணிக்கான பாராட்டுச் சான்றிதழ் என மாற்றி அந்த பாராட்டுச் சான்றிதழ் 4 பேருக்கு திரும்பவும் கரூர் மாவட்ட நிர்வாகம் வழங்கியது.