கரூர் கூட்ட நெரிசல்.. பலியானவர்கள் கூட்டத்தில் மிதிபட்டு இறந்தார்களா? மருத்துவர்களிடம் சிபிஐ கேள்வி
கரூர்: கரூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நிறைவடைந்த நிலையில், காவல் ஆய்வாளர்கள், மருத்துவர்களிடம் விசாரணை நடக்கிறது. இறந்தவர்கள் கூட்டத்தில் மிதிப்பட்டு இறந்தார்களா? மூச்சு திணறி எத்தனை பேர் இறந்தனர்? அதிர்ச்சியில் எத்தனை பேர் இறந்தனர் என உடற்கூறு ஆய்வு செய்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் கடுமையாக காயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்தது.
இதையடுத்து, இந்த வழக்கு குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பினராலும் எழுப்பப்பட்டன. முதல் கட்டமாக, உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

கரூர் நெரிசல்
அந்த குழுவினர் அக்டோபர் 5ஆம் தேதி கரூருக்கு வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்து, மின்வாரியம், மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல துறைகளின் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர். தவெக நிர்வாகிகள் சிலரும் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர். ஆனால், அக்டோபர் 13ஆம் தேதி உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முழுமையாக சிபிஐக்கு மாற்றி விசாரிக்க உத்தரவிட்டது. இதன் பின்னர் சிபிஐ அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் ஏடிஎஸ்பி முகேஷ் குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர் கரூருக்கு வந்து விசாரணையை தொடங்கினர்.
சிபிஐ விசாரணை
அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி ஆவணங்கள், சாட்சியங்கள் மற்றும் சம்பவத்திற்கு தொடர்புடைய அனைத்து தகவல்களையும் சேகரித்து வருகின்றனர். சிபிஐ குழு முதலில் கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணனிடம் விசாரணை நடத்தியது. பின்னர் அவசர ஊர்தி ஓட்டுனர்கள், அருகிலுள்ள வணிகஸ்தாபன உரிமையாளர்கள், சம்பவ நேரம் காவல் பணியில் இருந்த போலீசார், துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
தவெக நிர்வாகிகள்
கூட்ட நெரிசலில் காயமடைந்த பலரிடமும் சிபிஐ தனியாக பேசி விவரங்கள் பதிவு செய்தது. இதனுடன், தவெக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச் செயலர் ஆதவ் அர்ஜூனா, இணை பொதுச்செயலர் நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலர் மதியழகன் மற்றும் மாநகரப் பொறுப்பாளர் மாசி பவுன்ராஜ் ஆகியோரும் சிபிஐ முன்னிலையில் விளக்கமளித்தனர்.
கரூர் மருத்துவர்கள்
மேலும், சம்பத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் அடுத்த கட்ட விசாரணையை சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். கரூர் நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள், உடற்கூறு ஆய்வறிக்கையை பெற்று கையெழுத்திட்ட காவல் ஆய்வாளர்களிடம் விசாரணை நடைபெற்றது. இதில் பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் மருத்துவர்களிடம் கேட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மூச்சுத்திணறல் மரணம்
அதாவது நெரிசலின் போது உயிரிழந்தவர்களில் கூட்டத்தில் மிதிபட்டு இறந்தவர்கள் எத்தனை பேர்? மூச்சு திணறல் காரணமாக எத்தனை பேர் பலியானார்கள்? அதிர்ச்சியில் எத்தனை பேர் இறந்தார்கள்? மிதிபட்டு இறந்தவர்களின் உடல்களில் எங்கெங்கே காயம் இருந்தது? அதிர்ச்சி மரணம் என்றால் அவர்கள் உடலில் காயங்கள் இல்லையா? என பல்வேறு கேள்விகளை கேட்டதாக சொல்லப்படுகிறது.
மிதிபட்டு மரணம்?
மேலும் ஒரே நேரத்தில் உடற்கூறு ஆய்வுக்கு மருத்துவர்கள் கிடைத்தது எப்படி? எங்கிருந்து வந்தார்கள்? என பல்வேறு கேள்விகளை மருத்துவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் முன் வைத்துள்ளனர். மேலும் காவல் ஆய்வாளர்களிடமும் உடற்கூறு ஆய்வு தொடர்பாகவும், அந்த அறிக்கையை தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போது உடற்கூறு ஆய்வு அறிக்கை முழுமையாக படிக்கப்பட்டதா? உடற்கூறு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டதா? என கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications