தேர்தல் களத்தில் தீவிரமான செந்தில் பாலாஜி.. விளைவு, கொடி கட்டிப் பறக்கும் வதந்தி!
கரூர்: தினகரனின் நம்பிக்கைக்குரியவரான செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தேர்தல் களத்தில் இப்போதே தீவிரமாகி விட்டார். தேர்தல் வந்தால் அவர்தான் ஜெயிப்பார் என்று பலமாக பேச்சும் அடிபடுகிறது.
இதனால் எதிர் தரப்பில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே பீதியடைந்துள்ளனவாம். பிறகென்ன, செந்தில் பாலாஜிக்கு எதிராக ஒரு பரபரப்பான வதந்தியை கொழுத்திப் போட்டுள்ளதாக சூடாகிக் கிடக்கிறது கரூர் மாவட்டம்.
ஜெயலலிதா அமைச்சரவையில் அதாவது கடந்த 2011-ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். பின்னர் அவர் மீது ஒரு சில காரணங்களால் ஜெ.வுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து "குட்புக்"கில் இருந்த செந்தில் பாலாஜிக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சசிகலாவுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்பதால் அவரது சிபாரிசின் பேரில் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை செந்திலுக்கு ஜெயலலிதா வழங்கினார். அந்த இடைத்தேர்தலில் அவர் வெற்றியும் பெற்றார். பின்னர் ஜெயலலிதா இறந்த பிறகு தினகரன் பக்கம் சாய்ந்த செந்தில் பாலாஜி சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்தது.
முனைப்பு
இந்த நிலையில் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் எப்படியும் எம்எல்ஏ ஆகியே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில் அத்தொகுதியில் இப்போதிலிருந்தே பணிகளை தொடங்கி பம்பரம் போல் சுழன்று வருகிறார். பக்காவாக திட்டமிட்டு செயல்படுவதில் செந்தில் பாலாஜி கில்லாடி என்பதால் எதிர்த்தரப்பு இப்போதே கிலியில் உள்ளது
நினைவுநாள்
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களோ அதிமுக வேட்பாளர்தான் வெற்றி பெற வேண்டும் என முனைப்புடன் செயல்படுகின்றனர். இதனால் செந்தில் பாலாஜிக்கு வேண்டப்பட்ட அமமுக நிர்வாகிகளை அதிமுகவுக்கு இழுக்கும் பணிகளை அமைச்சரின் ஆதரவாளர்கள் கனகச்சிதமாக செய்து வருகின்றனர். எனினும் செந்தில் பாலாஜி தொய்வடையவில்லை.
நிச்சய வெற்றி
கடந்த இடைத் தேர்தலிலேயே மிகப் பெரிய அளவில் பணத்தை இறக்கி வித்தை காட்டியவர் செந்தில் பாலாஜி. எனவே இந்த முறையும் அவர் ஆட்டம் பயங்கரமாக இருக்கும் என்கிறார்கள். இந்த நிலையில்தான் அவர் எதிர்க் கட்சிக்கு தாவப் போகிறார் என்று ஒரு வதந்தி படு வேகமாக பரவி வருகிறது.
பொய்
அமமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கட்சி தாவப் போறீங்களா என்று பச்சையாகவே கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நான் அமமுகவை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். இதெல்லாம் அதிமுகவினர் கட்டவிழ்த்துவிடும் பொய்களில் ஒன்று என்று கூறியுள்ளார்.
நம்பிக்கை நட்சத்திரம்
தினகரன் அதிகம் நம்பும் நபர்களில் ஒருவர் தங்க தமிழ்ச்செல்வன். இன்னொருவர் செந்தில் பாலாஜி. சசிகலா குடும்பத்துடன் மிகவும் நெருக்கமான நட்பு பாராட்டுபவர் செந்தில் பாலாஜி. எனவே அவர் கட்சி தாவப் போகிறார் என்ற செய்தியை அமமுகவினர் ஹய்யோ ஹய்யோ என்று வடிவேலு ரேஞ்சில் சிரித்தபடி கடந்து செல்கின்றனர்.